எழுத்து – அது கட்டுரையாகட்டும், இலக்கிய வடிவங்களான கதை, சிறுகதை,
கவிதை எதுவாக இருந்தாலும் மனிதன் தான் சொல்ல நினைப்பதை முழுமையாக, தான் கற்பனை செய்த
அதே சொற்களால் கூறிவிட முடிவதில்லை. தன் மனதிற்குள்
அழகழகான சொற்களால் வடிவமைக்கப்பட்ட வாக்கியங்கள் எழுத்தாக வெளிவரும் போது அதன் அழகில்
பிசிறு இருப்பதாகவே படைப்பாளி உணர்கிறான்.
உலகில் எந்த ஒரு எழுத்தாளரும், இலக்கியவாதியும், தன் மனதில் ஓடிய அதே சொற்களாலேயே
முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்று கூறிக் கொள்ள முடியாது. அப்படிக் கூறிக் கொண்டால் அங்கு படைப்பாளி மரணித்து
விடுகிறான். இது மனித குலத்திற்கே உள்ள சவால். மனிதனின் சிறந்த எழுத்துக்களை நோக்கிய, வெறிபிடித்த
பயணமது. இந்த வெறிதான் கவிதை என்னும் இலக்கிய
வடிவம் தோன்றுவதற்கான மூல காரணம். தன் எண்ணம்
மற்றும் உணர்வை, காலத்தின் வேகத்தில் – அது சிறு விநாடியே ஆயினும் கூட – சிறிதும் மாறிவிடாது
அதனை அவ்வாறே வெளிப்படுத்தும் முயற்சியில் குறைவான சொற்கள், பல்பொருள் பொதிந்த ஒரே
சொல் என்ற உத்தியின் அவசியம் மனிதனுக்கு நிர்பந்திக்கப்படுகிறது. இந்த நிர்பந்தத்தின் காரணமாக தன்னிச்சையாக உருவாகும்
வடிவம் தான் கவிதை. அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது.
தான் வாழும்
சூழலின் பாதிப்பின்றி எந்தக் கவிதையும் வெளிப்படுவதில்லை. ஆதியிலிருந்து சூழல் மாற, மாற வெளிப்படுத்த நினைக்கும்
விசயங்களும் அதன் அடிப்படையில் மாறிக் கொண்டே இருக்கிறது. இயற்கை குறித்த பயம், அதை எதிர்த்த போராட்டம் என்பதன்
தீவிரம் இன்று மாறியிருந்தாலும் கூட, சமூக அவலங்களும், கொடூரங்களும், மனிதனுக்கு மரண
அடி கொடுக்கும் போது ஆறுதலாக மடி தேடும் மனது கவிதையை நாடுகிறது.
ஒரு மனிதன்
தன்னை, தன் வலியை உணர்வதில், புரிந்து கொள்வதில் இரண்டு வகை உள்ளது. தன் உணர்வை மட்டுமே மையமாகக் கொண்டு புரிந்து கொள்ளும்
‘தன்மையப் போக்கு‘. மற்றொன்று, தான் வாழும்
சமூக அரசியல் குடும்பச் சூழலில் சக மனிதர்களின் உணர்வுகளோடு தன்னைப் புரிந்து கொள்வது. முதல் வகையைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் கவிதைகள்
அதற்கேயுரிய தன்மையுடன் வெளிப்படுகிறது. அதனாலேயே
ஹவியின் கவிதைகள் கவிதையின் மீது மோகம் கொண்ட ஆரம்ப வாசகனுக்குப் புரியாது. அவர்களுக்குப் புரியாதது பற்றி கவலைப்படாமல் இருப்பது
படைப்பிற்கும், படைப்பாளிக்கும் ஒரு சாபக்கேடு.
இந்நூலில்
இடம்பெற்றுள்ள சில கவிதைகள் பூடகமாய் எந்தவொரு பிரச்சினைக்கும் எந்த நேரத்திலும் எவரொருவரும்
அவரவர் புரிதல் மட்டத்திலிருந்து புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவை. சில கவிதைகள் வாசகனுக்கும் கவிஞனுக்கும் இடையே உள்ள
ஒத்த அலைவரிசையால் மட்டுமே சூட்சுமமாக புரிந்து கொள்ளக் கூடியவை. இங்கு கவிஞனோடு ஒத்த அலைவரிசையில் இல்லாத வாசகனின்
கதி கேள்விக்குறி.
ஒத்த அலைவரிசை
இல்லாத பொழுது சூட்சுமப் பொருள் புரியாவிட்டாலும் வார்த்தைகள்
வாக்கியங்கள் புரிய வேண்டும். இதற்காக கவிஞர்
கவலைப்பட வேண்டும். தன் வாழ்வின் அடையாளமென
மனித குலத்திற்கு விட்டுச் செல்லும் தன் கவிதை சிலருக்கு மட்டும்தான் புரியும் என்பதில்
மனநிறைவடைய என்ன இருக்கிறது?
இந்த உலகில்
சமூக உற்பத்தி முறை மனித உறவுகளைத் தீர்மானிக்கிறது. இந்த தீர்மானிக்கப்பட்ட உறவுகளில் தன்னைச் சுற்றி
உள்ளவர்களைப் புரிந்து கொள்வது, தன்னை அவர்களுக்குப் புரிய வைப்பது என்பது மனித குலத்திற்கு
மட்டுமே உள்ள சிக்கல். இதையொட்டி எழும் மகிழ்ச்சியும்,
வலியும்தான் மனித வாழ்வை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் ஊக்கிகள். இந்த மையப் புள்ளியிலிருந்து கொண்டு தன் கவிதைக்கு
வெளியே தான் கொண்டுள்ள அரசியல் புரிதலையும், ஹவி தன் கவிதை பரப்பிற்குள்
கொண்டுவர எனது வாழ்த்துக்கள்.
ப்ரிய
இந்திராகாந்தி
(ஹவியின் இசைக்குமிழி கவிதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை. உயிர்மை வெனியீடாக 2010 ல் வெளிவந்த இத்தொகுப்பிற்கு ராஜமார்த்தாண்டன் விருது வழங்கப்பட்டது.)