12.5.2012 அன்று பரிசல் செந்தில்
நாதன் படப்பெட்டி இதழ் சார்பாக ஏற்பாடு செய்திருந்த வழக்கு எண் 18/9 படத் திறனாய்வுக் கூட்டத்திற்கு சென்றிருந்தோம். புக் பாய்ண்ட் புத்தக்கடை யின் அரங்கத்தில் நடைபெற்றது,
புத்தகங்களுக்கு ஏசி போட்டவர்கள் அரங்கத்திற்கும் செய்திருந்தால்
நன்றாகயிருந்திருக்கும். நான் போனபோது வளர்மதி பேச ஆரம்பித்தார். அந்த திரைபடத்தின்
பார்வைக்கோணம் குறிப்பாக கேமரா கோணம் இவற்றை விளக்க பூதகதையொன்றை
சொல்லிக் கொண்டிருந்தார். வகுப்பில் இருப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது, வெக்கையான
அந்த வகுப்பை தாங்கமுடியாமல் கீழே குளிரூட்டப்பட்ட புத்தகக் கடைக்கு சென்றுவிட்டு
இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேச ஆரம்பிக்கும் போது வந்த்தால், மற்றவர்கள் என்ன உரையாற்றினர் என்று தெரியவில்லை.
பாலாஜி சத்திவேல் அந்த படத்தில் பணியாற்றியவர்களையும் நடித்த
(இன்ஸ்பெக்டர், முறுக்கு வியாபாரி, நீதிமன்ற ஊழியர்) நடிகர்களையும் பேச வைத்தார். அவர்கள் ஓரிரு
வார்த்தைகள் பேசி முடித்தனர். அதன் பிறகு இயக்குனருடன் கலந்துரையாடல் தொடங்கியது.
பலர் சுருக்கமாகப் பாராட்டினர். சிலர் சற்று நீளமாகப் பாராட்டினர். அங்கு
வந்திருந்தவர்கள் யாருமே சாதாரண பார்வையாளர்கள் அல்ல. ஒரு சில கேள்விகள்,
விமர்சனங்கள், அறிவுரைகள் மீது எனக்கு முரணான கருத்துக்கள் உண்டு. அதைப் பதிவு
செய்யவும், திரைப்படம் குறித்த எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த பக்கம்.
ரோஸி என்ற பாத்திரம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிப்பிட்டுக்
காட்டுவதாக இருந்தது. அதைத் தவிர்த்திருக்கலாம் என்றும் இடதுசாரிகள்தான் சமூகத்திற்கு எதிராக தங்கள் கோபத்தை காட்டுவார்களா
மற்றவர்கள் காட்ட மாட்டார்களா என்றும் ஆதங்கப்பட்டனர்.
ரோஸி என்கிற கதாபாத்திரம் ஏற்கனவே நல்லகுணம் கொண்டவளாக மனிதாபிமானம்
உடையவளாக இருக்கும் போது அவள் திருந்தி பூ விற்பதாக ஏன் காட்டவேண்டும் என்றனர்.
பெண் பற்றி சனாதன இந்து பார்வை உங்களுக்குள்
இருப்பதால்தான் காதல் படத்தில் முதலிரவு முடியுமுன்பே நாயகியை நாயகனிடமிருந்து
பிரித்தது போலவும், இந்த படத்தில் அந்த மிடில் கிளாஸ் கதையில் வரும் பெண் தனது
ஆபாசப் படங்களை அவன் பார்க்குமுன்பே அதைஅழித்து விடுவது போலவும்
கதையாக்கியுள்ளீர்கள் என்றார். (இந்தப் பார்வையாளர்களுக்கெல்லாம் ஈ படத்தில் வரும்
உதிரி கதாநாயகன் தீவிரவாதியாக மாறும் போது தன் காதலியை துறந்து விட்டுப் போவார்
அந்த அம்மணி காலில் விழுந்து கதறி அழும். உதிரி ஆண் புரட்சியாளரா ஆகுறாராம். காபரே
டான்ஸ் ஆடுற பெண் புரட்சியாளராக ஆக மாட்டாங்களாம். இதுவும் பழைமைப் பார்வைதான்.
இதெல்லாம் தெரியாதே)
இன்னொரு இளைஞர் அந்த படத்தில் வர்ற வேலு, தினேஷ் 2 பேருடைய குணமும்
என்கிட்ட இருக்கு எனறார். அப்படியெல்லாம் இல்ல தப்பா புரிஞ்சுக்காதீங்க என்று
இயக்குனர் சொன்னாலும் அந்த இளைஞன் விடாப்பிடியாக மறுத்தார். ஒரு வேளை தினேஷ்
முகத்தில் ஜோதி ஆசிட் வீசுவது போல கதையில் இருந்திருந்தால், அந்த இளைஞர் அப்படி
சொல்லியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். தமிழ் ரசிகர்கள் பெரும்பாலனவர்கள்
சினிமாவில் வரும் பாத்திரங்களில் இருக்கும் தன்னுடைய குணத்தை அடையாளப் படுத்திக்
கொள்ளும் அளவிற்கு அறிவும் பக்குவமும் அற்றவர்கள். சினிமா எந்த கதாபாத்திரத்தை
நாயகனாக காட்டினாலும் தன்னை அக்கதாபாத்திரமாக மாற்றிக்கொள்ளும் அறிவிலிகள்
என்பதைத்தான் அது எனக்கு உணர்த்தியது.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இயக்குனர் எனக்குள்ளும் பழைய கருத்தாக்கங்கள்
ஒட்டி கொண்டு இருக்கலாம், எல்லாமே Trial
and error என்றார். வெறுமே பொழுது
போக்கில் மட்டுமே இருக்கும் ரசிகர்களின் கவனத்தை இந்தப் பக்கம் பாருங்க என்று
திசைதிருப்பியிருக்கும் ஒரு சிறு முயற்சிதான்... நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்...
என்றார்.
என்னைப் பொறுத்தவரைக்கும் ஆணையும் பெண்ணையும் பாலியல் கோணத்தில் மட்டுமே
பார்ப்பது தான் சனாதனப் பார்வை. ஓடிப்போன காதலர்களிடையே உடல் ரீதியாக என்ன
நிகழ்ந்திருக்கும் என்று எடுத்த எடுப்பிலேயே நினைக்க வைப்பதுதான் சனாதனப் பார்வை. 2வது
திருமணம் நம் சமூகத்தில் பெரிய தியாகமாகப் பார்ககப் படுவதும் புரட்சிகரமாக
நினைக்கப் படுவதும் கூட இதனால்தான். அழுக்குப்பிடித்த ஆணாதிக்க இந்து சனாதனப்
பார்வையுள்ளவர்களுத்தான் ஒரு விதவையை, விவாகரத்துப் பெற்ற பெண்ணை திருமணம் செய்து
கொள்வதுகூட பெரிய்யய புரட்சிகரச் செயல் எனப் படுகிறது.
. கூட்டத்தில் அனறு ஒரு இளைஞன், விஜய் மில்டனிடம் (ஒளிப்பதிவாளர்) அந்தப்
படத்தில் மிடில் கிளாஸ் கதையில் வரும் கதாநாயகியின் கிளிவேஜ் தெரிவது போல கேமரா
கோணம் இருந்தது அதை தவிர்த்திருக்கலாம் என்று சொன்னபோது நாங்க அதைக் கவனிக்கலை காட்சியில் வேறு
விசயங்களில் கவனம் செலுத்திவிட்டோம். இனிமேல் இதையும் கவனத்தில் எடுத்துக்
கொள்கிறோம் என்று பதில் கூறியது மகிழ்க்சியாக இருந்தது.
விபச்சாரம் என்பது ஆணாதிக்க சமூகத்தின் கண்டுபிடிப்புதான். எங்கெல்ஸ் தனது
குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் வரலாற்றில் எப்படி
பார்த்தாலும் ஆண் தனது கட்டற்ற பாலியல் வேட்கையிலிருந்து விலகி ஒரு ஒழுங்குக்குள்
தன்னை கொண்டு செல்ல நினைத்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பெண்கள்தான் முதன் முதலாக
முன்னெடுத்துச் செய்திருப்பார்கள் என கூறியிருப்பார். அந்த அடிப்படையில்தான் ரோஸி
எனும் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார். விபச்சாரத் தொழிலை செய்வது இழிவானது அல்ல என்ற கருத்து மதங்களோடும், ஆதிக்கத்தோடும்,
இங்கு சாதியோடும் தொடர்புடையது. சமூக வாழ்வின் நிர்பந்தம் தான் பெண்களை இந்த
தொழிலுக்கு தள்ளுகிறது என்ற நியாயமான பார்வை இயக்குனரிடம் இருந்ததால்தான் அந்தப்
பெண் தன்னை மாற்றிக் கொள்வது போல காட்டப் பட்டுள்ளது.
ஆனால் அந்தப் பாத்திரத்திற்கு ரோஸி என்று ஒரு மதத்தின் பெயரைச்சுட்டிக் காட்டுவது
போன்ற பெயரை தவிர்திருக்கலாம். அதுமட்டுமல்ல ஆபாச படங்களை செல்போனில் பார்த்த
மாணவர்களை இன்ஸ்பெக்டர் கண்டிக்கும்போது ‘தூய இருதய ராஜின் மகன்தாண்டா நீயி‘
என்பார். பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதிலும் அரசியல்
இருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் மதமாக கிறித்தவம் இருக்கிறதுதான். ஆனால்,இங்கு கிறித்தவம் சிறுபான்மை மதமாகத்தான் இருக்கிறது தினேஸ் காவல் நிலையத்திற்கு வரும்போது நல்ல பையனாக காட்டுவதற்காக அவனுக்கு நெற்றியில் திருநீறு வைக்கப்பட்டிருக்கும்.
இடது சாரிகள் தான் கோப்ப்படுவார்களா என்ற ஆதங்கத்திற்கு ஒரு பதில். யார்
இல்லையென்று சொன்னது. அதுதான் எல்லா படத்திலும்
இடதுசாரியில்லாத கதாநாயகன் பல பெண்களோட ஆட்டம் போட்டுவிட்டு அப்புறம் திடீரென ஒரு
கதாநாயகிய காதலித்து பிறகு கோபாவேசமா அநியாயத்தை எதிர்ப்பாரே. ஏன் போலிஸைக் கூட
எதிர்ப்பார். ஆனால் என்ன போலிஸ்லயும் ஒரு நல்ல போலிஸ் கதாநாயகனுக்கு உதவி
செய்வார். இயக்குனருக்குள்ளிருக்கும் இடதுசாரிச் சார்புதான் ஒரு பெண்ணைக்
எதிர்ப்புக்குணமுள்ள கதாநாயகியாகச் சித்தரிக்க வைத்திருக்கிறது..அதுவும் போலீஸ்
மீதான தாக்குதலாக. என்ன வழக்கம் போல போலீஸ் அராஜகத்தை காண்பிக்க கதாநாயகனை போலீஸ்
அடிக்கும் காட்சி, இந்த காட்சி பல படங்களில் காட்டப் பட்டுவிட்டதாலும்,
நிஜசம்பவங்களே இதை விடக் கொடூரமாக தொலைக்காட்சிகளில் காட்டப்படுவதாலும் அது துருத்திக்கொண்டு
தெரிகிறது. முக்கியமாக படத்தில் இன்ஸ்பெக்டரின்
கயமையோடு நல்லவன் போல நடிக்கும் குணத்தின் பாதிப்பு குறைந்து விடுவது போலத்
தெரிகிறது. அந்தக காட்சி இல்லாவிட்டால் இன்ஸ்பெக்டரின் கதாபாத்திரத்தின் குணம்
இன்னும் தூக்கலாக தெரிந்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அடிக்கடி ஒரு
விசயம் காட்சிக்கு காட்சி காட்டப் பட்டால் அதன் வீரியம் குறைந்து விடும் என்ற
உத்தியை கதாநாயகியின் அமிலம் வீசப்பட்ட
முகத்தை ரசிகர்களுக்கு காட்டுவதில் பயன் படுத்தியிருக்கிறார்.
இடதுசாரிகள் மட்டுமே போலீஸ் அநியாயத்தை எதிர்ப்பது இல்லைதான். அண்மையில்
ஒரு ரவுடியின் மனைவியிடம் வாலாட்டிய போலீஸை வெட்டிக் கொன்று விட்டான் அந்த ரவுடி.
அதன் காரணமாய் போலீஸ் வழக்கம்போல ரவுடியைப்போட்டுத் தள்ளிவிட மனைவியும் தற்கொலை
செய்து கொள்ள அவர்களின் குழந்தை அனாதையாக மாறிய சம்பவம் தமிழ்நாட்டில் தான்
நடந்துள்ளது. கதாநாயகி சிவப்பு புத்தகத்தை படித்தவரின் மகளாக
சித்தரிக்கப்ட்டிருப்பதன் மூலம் தனக்கு
நேரும் அநீதிக்கு இந்த அரசுதான் அதன் கருவியான போலீஸ்தான் காரணம் என்ற புரிதலில்
ஆசிட் ஊற்றியவன் மீது ஆசிடை ஊற்றாமல் போலீசை
தாக்குவதாகச் சித்தரிக்கப்ட்டுள்ளது.
ஆனால் அதே பாதிப்பில் தனது நடவடிக்கையைத் தீர்மானிப்பவளாய் கதாநாயகி தன்
தாக்குதலை அந்த அரசியல்வாதிமீதோ அல்லது ஆசிட்டை ஊற்றியவன் மீதோதான் (வர்க்கப்
பகைமையின் அடிப்படையில்) தாக்குதல் நடத்தியிருக்கவேண்டும். ஆனால் இங்கு
கதாநாயகியிடம் காதல் வேலை செய்கிறது. தனக்காக தன்னை நேசித்தவன்
அடிவாங்கியிருக்கிறான், போலீஸால் ஏமாற்றப்பட்டிருக்கிறான் என்பதன் தாக்கத்தின்
விளைவாக அச்செயல் மாறி விடுகிறது.
அப்புறம் நம் தமிழ் ரசிகர்களிடம்
எப்படிக் குப்பை கொட்டுவது. ஆசிட் ஊற்றியவனைப் கண்டு கொள்ளாமல் விட்டு விட
வேண்டும். ஆபாசப் படம் பார்த்த மாணவர்களை
தோப்புக் கரணம் மட்டும் போடச் சொல்லி விட்டு விட்டுவிடவேண்டும். தன் காதலனை
ஏமாற்றியதற்காக போலீஸைத் தாக்க வேண்டும். தாக்கப்பட்ட பின் போலீசிடம்
அடிவாங்குவதையும் வழக்கமான் ஹீரோயிச படக் காட்சி போல காட்டப் பட வேண்டும்.
இறுதியில் கதாநாயகன் ஆசிட் தாக்குதலால் கோரமாகிப் போன முகத்தைப் பார்த்த பின்பும் உனக்காக.....
என்று வசனம் வேண்டும். இறுதிக் காட்சியான சிறைச்சாலை காட்சி படத்தின் முதலில் வந்த
யதார்த்தமான சிறைக்காட்சிபோல் யதார்த்தமாக இல்லாமல் செய்த்து ஓரளவிற்கு படத்தின்
வெற்றிக்கு உதவியதாக கருதுகிறேன். இந்த படத்தில் அந்த பெண் காதலன் இல்லாமல், காதல் இல்லாமல், கதாநாயகி
பாத்திரம் இடதுசாரி வளர்ப்பில் வந்த பெண் என்ற உணர்வில் தன்னோடு சம்பந்தமில்லாத
ஒரு பொது பிரச்சினைக்காக போராடுபவளாக அமைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் நம்
ரசிகர்களுக்கு பிடித்திருக்காது. (சமுராய் படத்தில் கதாநாயகியின் நிலை அதுதான்.)
இன்றைய தமிழ் திரையுல சூழலில் இந்த படம் வித்தியாசமான சிறந்த படம்தான்
அதில் மாற்று பேச்சுக்கே இடமில்லை. படத்தின் கதைக்கரு, கதாபாத்திரங்கள்,
கதாபாத்திரங்களின் நல்ல கெட்ட குணங்கள், காதல் அனைத்துமே வர்க்க அடிப்படையில்,
ஆதிக்கத்துக்கும் அடக்குமுறைக்குமான முரண்களை தெளிவாக காண்பிப்பதாக அமைக்கப்
பட்டிருப்பது மிக முக்கியமானது. வேலு பசியால் மயங்கிக் கிடக்கும்போது நாகரீக் கொழுந்துகள் குடிச்சிட்டு கிடக்கிறான் என்று சொல்லிவிட்டு போகும் போது ரோஸி உதவி செய்வது,
தினேஸ் ஆர்த்தி காதலுக்கும், வேலு ஜோதிகாதலுக்குமான வேறுபாடு, தினேஸ் அவனது நட்பும், வேலுவும் அவனது நட்பும், ரோஸி திருந்துவது, ஜெயலட்சுமி அதே வாழ்வைத் தொடருவது, காவல் துறையின் கயமை என எல்லாமே வர்க்க அரசியலை உள்ளடக்கியது.
கல்லூரி படத்திலும் இந்த படத்திலும் ஒரு ஆட்சியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுத்துள்ளார். கல்லுரி படத்தில் உண்மைச் சம்பவத்தை அப்படியே எடுத்திருந்தார். ஆனால் படம் ஓடவில்லை. இந்தப் படத்தில் ஆசிட் வீச்சை வேறு வர்க்கத்திற்கு பொறுத்திப் பார்த்து புனைவாய் கதை சொல்லியிருக்கிறார். படம் நன்றாக ஓடுகிறது. ஆனால் இதில் இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக
வந்திருக்குமே என்ற ஆதங்கத்திலிருந்து சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
இப்படத்தின் கதாநாயகனின் அம்மா அப்பாவை கிராமச் சூழலில் காண்பிக்கும் காட்சி சின்ன
பிள்ளைகள் பள்ளியில் செய்த நாடகக்கட்சி போலவே (கோபத்துடன் அருவாளை எடுத்து வெட்ட
வருவது) இருந்தது. அக்காட்சி இச்சமூகத்தின் வலிமிக்க உண்மையைச் சொல்வது என்பதால் அவர்களிடம்
இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம்.
. அது போலவே ரோசி என்னும்
கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்ணின் நடிப்பிலும் தேர்ச்சி இல்லை. தாடிக்கார கடைக்காரர் சிறப்பாகச்
செய்துள்ளார். கதாநாயகனை இன்னும் கொஞ்சம்
வேலை வாங்கியிருக்கலாம். கறுப்பாக
ஒல்லியாக இருந்தாலும் அவரது உடல் மொழி அடித்தட்டு வர்க்க இளைஞனின் உடல்மொழியாக சில
இடங்களில் இல்லை. (உதாரணத்திற்கு முறுக்கு கம்பெனியில் இருந்து ஓடிவருகிற
காட்சிகள்) காதல் காட்சிகளில் சிறப்பாக
செய்திருக்கிறார். அழிந்து போய் கொண்டிருக்கிற கூத்து கலையை நினைவுபடுத்தும்
கதாநாயகனின் நண்பனின் கதாபாத்திரம். அந்த முடிவெட்டு அந்தப் பாத்திரத்துக்கு
ஒத்துப்போகவில்லையோ என்று தோன்றுகிறது.
மிடில் கிளாஸ் கதையில் வரும் தினேஸ ஆர்த்தி நன்றாகவே
செய்துள்ளார்கள். (குறிப்பாக காரில் அந்த பெண் செல்போனில் உள்ள படங்களை பார்த்து
வெளிப்படுத்தும் முக பாவனைகள்,செல்போனை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு மொட்டைமாடியில் ஆர்த்தியின் அழைப்புக்காக காத்திருந்து ஆர்த்தியின் அழைப்பு வந்த்தும் பேசுவது இவையிரண்டுமே குளோசப்பில் வரும் காட்சிகள்.) முறுக்கு தொழில்
அதிபர், அவரின் மனைவி, கதாநாயகியின் அம்மா, இன்ஸ்பெக்டர், அரசியல்வாதியின் கையாளாக
இருக்கும் ஜெயலட்சுமி என எல்லா பாத்திரங்களும் வெளுத்து வாங்கியுள்ளனர்.
இயக்குனர் செல்போனில் ஆடையை
அவிழ்க்கும் காட்சியைத்
தவிர்த்திருக்கலாம். (இதைமட்டும் தணிக்கை குழு அனுமதித்து விடுகிறது. கூட்டத்தில்
கிளிவேஜ காட்சியை சுட்டிக்காட்டியவர்கள் இதை ஏன் சொல்லவில்லை என்று எனக்குப்
புரியவில்லை.) அந்தக் காட்சி இல்லாமலேயே அந்த இடத்தில் சொல்ல வருகிற விசயம்
தெளிவாகப் புரிநதுவிடும். செல்போனில் அவளது புகைப்படங்களை பார்த்துகொண்டிருக்கும்
போதே பார்வையாளர்களுக்கு விளங்குவதற்காக
அவன் செல்போனில் சார்ஜ் போடுவதற்காக அவள்
உடை மாற்றும் அறையில் செல்லை விட்டு போகும் காட்சி மீண்டும் காட்டப் படுகிறது.
அதன் பிறகும் எதற்கு அந்தக் காட்சி.
இறுதியில் ஜோதியின் பாத்திரப்படைப்பு. அதிகம் பேசாத, கொஞ்சிக் குலையாத,
ஆடிப்பாடாத, இடுப்பைக்காட்டாத, சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாத, அதிக ஒப்பனை
இல்லாத, அன்பும் பொறுப்பும்மிக்க ஒரு பெண் பாத்திரத்தை தமிழ்
திரையில் பார்க்கும் போது இயக்குனர் மீது பெருமதிப்பு வருகிறது. இருந்தாலும் ஒரு
குறை. இன்ஸ்பெக்டர் மீது ஆசிட் ஊற்றுவதற்கு முன்பு, அவள் எழுதிய கடிதத்தை
படிக்கும் போது குரலில் உள்ள தொனி வழக்கமான தமிழ் கதாநாயகிகளுக்கு மட்டுமே
பொருந்தும். அந்த தொனி இந்த பாத்திரத்தின் ஆளுமையை குறைத்து, குலைத்து விடுவது
போல் எனக்கு தோன்றுகிறது. ஆனால் அதை நம் ரசிகர்கள் ஏற்பார்களா என்று கேட்டால் கடினம்தான்.
இயக்குனர் ரசிகர்களின் மனத்தை நன்கு
படித்துள்ளார். இவர்களை வழக்கமான பாணியிலிருந்து திசை திருப்புவது என்கிற செயலை
நன்றாகவே செய்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் அதிக தொழில் நுட்பக் கருவிகளை
பயன்படுத்தாமல் வெறுமே பொழுதை போக்குவதற்கான படமாக இல்லாமல், அதே நேரம் கதையின்
வேகம் குறையாமல் பார்வையாளனை உட்கார வைப்பது எளிதான காரியமல்ல. அதில் நூறு சதம்
அவரும் அவரது குழுவினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இங்கு சுட்டிக்காட்டியுள்ள அற்பமான குறைகளை விட கூடுதலானவற்றை படைப்பாளி
என்ற முறையில் இயக்குனர் உணர்ந்திருப்பார். அதனால் மற்றுமொரு தரமான படைப்பை
நாமெல்லாம் மீண்டும் இந்த குழுவினரிடமிருந்து ஆவலோடு எதிர்பார்த்துக்
காத்திருக்கலாம்.





