Monday, August 19, 2013

மாணவப் பருவமும் காதலும்



பள்ளிப் பருவத்தில் காதலிப்பது போல் சினிமா எடுப்பது தவறா? அந்தக் காலத்தில் பால்ய விவாகம் நடக்கவில்லையா? அத்தை மகள்/ மகனை இவன்/இவள் உனக்குத்தான் என்று சொல்லி வளர்த்ததில்லையா? என்று கேட்கின்றனர் சில இயக்குனர்கள். இன்னும் சிலர் 16, 20 வயதில் காதல் வராதா? வரக் கூடாதா? இதிலெல்லாம் சட்டம் தலையிடுவது தனிநபர் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்குவது போன்றது என்று கூறுகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும், பள்ளிப் பருவத்தில் காதலிப்பது போல் சினிமா எடுப்பது இந்த சமூக வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. அந்தக் காலத்தில்  நடந்த பால்ய விவாகம், பெரியவர்களின் விருப்பத்திற்காக பெண்ணை விட மிக அதிக வயதுள்ள தாய்மாமனுக்குத் திருமணம் செய்து கொடுப்பது எல்லாமே தவறுதான். யார் இல்லை என்றது? அது மடத்தனமான பண்பாடு என்று சொல்லித்தானே அதில்சிலவற்றை மாற்றியிருக்கிறோம். இன்னும் மாற்ற முயற்சிக்கிறோம்.

அதற்காக. பள்ளிச் சீருடை அணிந்து படிக்கச் செல்லும் மாணவ மாணவிகள் காதலிப்பதாக சினிமா எடுப்பதை எப்படி நியாயப் படுத்த முடியும்?

இன்று காதல் திருமணங்களுக்கு என்ன விதமான சமூக அங்கீகாரம் உள்ளது? அதுவும் படிக்கும் காலத்தில் ஏற்படும் காதல்களுக்கு? படிக்கும் ஒரு பெண் காதலித்தால் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு. இதில் பெண்கல்வி, பெண் தன் சுய சார்போடு வாழ்வதற்கான கூறுகள் எங்கிருக்கிறது? இந்தச் சமூகத்தில் அதற்கான சூழல் எங்கிருக்கிறது?

பத்தாவது, பதினோறாவது படிக்கிற பெண்ணைக் கட்டாயப் படுத்தி அவளது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைப்பது தவறானது, சட்டப் படி குற்றமானது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டுமாம்.
ஆனால், அறிவு முதிர்ச்சி இன்றி அதே இள வயதில் காதலித்தால் அது நியாயமானது, தனிநபர் சுதந்திரம். அதில் யாரும் தலையிடக்கூடாதாம். அந்த அளவிற்கு தனிநபர் சுதந்திரத்தின் பொருள் புரிந்த சனநாயக நாடல்ல இது. அப்படி எந்தப் பெண்ணும் வளர்க்கப்படுவதில்லை. இந்த வாதமெல்லாம் பெண்ணின் வாழ்க்கைக்கு, எதிர்காலத்திற்கு, குறிப்பாக உடம்பிற்கு கேடு விளைவிக்கக் கூடியதாகத்தான் அமையும்.

சிறு குழந்தையை கண்டிக்கக் கூடாது, செல்லமாய் சுதந்திரமாய் வளர்க்க வேண்டும் என்பதற்காக அதை தீயுடன் விளையாட விட முடியாது. அது போலத்தான் வாழ்வின் யதார்த்தப் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் அறிவும், மனப்பக்குவமும் இல்லாத மாணவ மாணவிகளை நெறிப் படுத்துவதில் தவறொன்றும் இல்லை.


பால்ய விவாகம் செய்து வைத்து பெண்ணைப் படிக்கவிடாது, குடும்பச்சுமைக்குள் அடக்கி வைப்பதற்கு சற்றும் குறைந்ததல்ல, இந்த பள்ளிக் கால காதலை நாம் ஊக்குவிப்பது என்பதே என் நிலைப்பாடு.

அந்தக் காலத்திலாவது பால்ய விவாகம், தாய்மாமனைத் திருமணம் செய்து வைப்பது போன்றவற்றிற்கு அன்றைய சமூகத்தில் அனுமதி இருந்தது, அது ஒரு வாழ்முறையாக இருந்தது. சமூக, சட்ட அங்கீகாரம் இருந்தது. கூட்டுக் குடும்பம், அதனுள் அதிகாரப் படிநிலை இருந்தாலும் அவர்களுக்கு பெருமளவில் பொறுப்புகள் இல்லாத தன்மை இருந்தது. இன்று பலரால் ஜீரணிக்க  முடியாத அமைப்பாக, கூட்டுக் குடும்ப முறை இருந்தாலும் அவர்களது வாழ்விற்கு குறைந்த பட்ச உத்திரவாதமும் பாதுகாப்பும் அதில் இருந்தது. 

ஆனால் காதல் திருமணங்களுக்கு அதுவும் 14,18,20 வயது காதல்களுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கிறதா? சட்ட அங்கீகாரத்தை விடுங்கள், சமூக அங்கீகாரம் எந்த அளவு உள்ளது. இதில் சாதிதான் குறுக்கே நின்று சமூக அங்கீகாரத்தை அளிக்க மறுக்கிறது என்று சொல்ல வரலாம்.

பெண்ணைப் பொறுத்த வரை சொந்தச் சாதியானாலும் சரி, வேறு சாதியானாலும் சரி இள வயதில், குறிப்பாக படித்துப் பொருளீட்ட தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய வயதில், திருமணம் செய்யும் பெண் தன் கணவன், குழந்தை பேணல் என்ற வட்டத்திற்குள்தான் சிக்கியாக வேண்டும். பெண் பல உடலியல் இடர்பாடுகளைச் சந்தித்தே தீரவேண்டும். இது தவிர அவர்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு வேறு அவர்களுக்கு உள்ளது.

மாணவப் பருவ காதல் கைகூட திருமணம் செய்ய வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டும் அல்லது குழந்தை உருவாகாது தடுப்பதற்கானவற்றைச் செய்ய வேண்டும்.
இந்த ஆணாதிக்க சமூகம் கருத்தடையை பெண்ணுக்கு மட்டும் சுமத்தி வைத்துள்ளது, அதுவும், வெறும் பிள்ளை பெறும் இயந்திரம் என்கிற பார்வையில், ஒரு இயந்திரத்தின் உற்பத்தியை நிறுத்துவது போன்று இயந்திர கதியான தீர்வுகளை வைத்துள்ளது. அதனால் ஏற்படும் உடல் சார்ந்த பின் விளைவுகள்,.  என்றைக்கும் அவளது தன்னம்பிக்கையை வளர்க்கப் போவதில்லை எந்த ஆணுக்கும், அவர்கள் முற்போக்கோ, பிற்போக்கா அதுபற்றிக் கவலை இல்லை. பெண்ணின் உடல் நிலையிலிருந்து, மனநிலையிலிருந்து  இந்தச் சிக்கலைப் பார்த்துப் புரிந்து கொள்ளுமளவிற்கு அவர்களுக்கு அறிவும் இல்லை, உணர்வும் இல்லை.

மனதும் சிந்தனையும் இதில் உழலும் போது அவளது மூளை படிப்பிற்கும், தனது பொருளாதார சுயச் சார்பிற்காகவும் எப்படி சிந்திக்கும். இதன் மூலம் எப்படி பெண்கல்வி, பொருளாதாரச் சுதந்திரம், பெண் சமத்துவத்தை அடைய முடியும் என்று நினைக்கிறார்கள்?  இல்லை, காதலுக்கும், பெண்ணுக்கும், பெண் சமத்துவத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று நினைக்கிறார்களா?

இதற்கும் சில பிற்போக்கான அறிவியலுக்கு அறிவிற்குப் புறம்பான காரணங்களை சொல்ல வருவார்கள். இளவயதில் குழந்தை பெற்றுக் கொள்வது எளிது என்பார்கள். இளவயதல்ல மனதளவில் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். பக்குவம் இருக்க வேண்டும். ஒரு குழந்தையைப் பேணிக்காக்க வேண்டிய அறிவும் தெளிவும் இருக்க வேண்டும். எதுவும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமாக உடலும், மனமும இருக்கும் வயதில் தங்களது சக்தியை முழுமுழுக்க உடல் சார்ந்த காமத்தேவைகளுக்கு மட்டும் பயன் படுத்தி விட்டு, பின் அதன் விளைவுகளை வாழ்நாள் முழுதும் சந்தித்து வாழ்வது மட்டுமே வாழ்க்கையாகி விடும்.
இது போன்று, பல காதல் திருமணங்கள் வெற்றிகரமான வாழ்வாக மாறுவதற்கு வழக்கம் போல அதில் பெண்களின் தியாகங்கள் தான் உரமாக இடப்படுகின்றன.

இன்று திருமணமான பெண்கள் இயல்பாக பள்ளிக்குச் சென்று படிக்க முடியுமா? இல்லை, ஆண்கள்தான் இயல்பாகச் செல்ல முடியுமா?


இன்று காதலுக்காக பரிந்து பேசுபவர்கள் அதற்கான சட்ட சமூக அங்கீகாரங்களைப் பெறுவதற்கு நடைமுறையில் என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்? சினிமாக்காரர்கள் என்றுமே தீர்வு சொல்ல மாட்டார்கள். அவர்களை விட்டுவிடுவோம்.

காதலை எவ்வித விமர்சனமும் இன்றி கண்மூடித்தனமாக ஆதரிக்கும், அரசியல் கட்சிகள், அறிவுஜீவிகள், சாதி ஒழிப்பாளர்கள் என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்.

Friday, August 9, 2013

கல்லானாலும் காதலன்



பல முக்கியமான அரசியல் தலைவர்களை உருவாக்கிய பெருமை வாய்ந்த, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்திற்குள் இரண்டு நாள் முன்பு, ஒரு மாணவன் சக மாணவியை கத்தியால் தாக்கி விட்டு தானும் விசம் தின்று இறந்து போனான். அந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

வழக்கம் போல காதல் பிரச்சினைதான், அவனது தோழியான அந்த மாணவி அவனை மதிக்கவில்லையாம், எரிச்சலூட்டினாளாம்.வெறுமே தன்னைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், ஏமாற்றி விட்டதாகவும் அவன் உணர்ந்திருக்கிறான். அதற்காக துப்பாக்கி, கோடாரி, கத்தி, விசம் சகிதமாய் வந்து தன் தோழியை குத்திக் கொன்று விட்டு, தானும் செத்துப் போக முடிவு செய்து வந்துள்ளான்.

சென்ற தலைமுறை ஆணாதிக்க வாதிகளுக்கு பெண் தாய், தெய்வம் என்றால் இன்றை இளைஞர்களுக்கு தேவதை + தாய். பார்க்க நல்ல தேவதைபோல், சினிமாக் கதாநாயகிகள் போல் இருக்க வேண்டும். தன்னைச் சாராமல் சுயமாக சம்பாதிக்கத் தெரிந்த, அறிவாளியாக இருக்க வேண்டும். அதே நேரம், வழக்கம் போல் தான் என்ன செய்தாலும் பொறுத்து, மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவமுள்ள தாயாகவும் இருக்க வேண்டும்.

என்ன தவறு செய்தாலும், தாய் தன் குழந்தையை ஏற்றுக் கொள்வாள், ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் இந்த சமூகக் கட்டமைப்பில். அது அந்த வயது கொடுக்கும் முதிர்ச்சி.

ஆனால் காதலி, அவனைப் போலவே ஒரே வகுப்பில் படிக்க வந்தவள். இவனையொத்த சக வயதுள்ளவள். ஆனால், அவளிடத்தில் தாயை யொத்த பக்குவத்தை எதிர்பார்க்கின்றனர். தன்னைப் போன்ற சக மனுசிதான் தன் காதலியும், அவளுக்கான விருப்பு, வெறுப்புகள் இருக்கும். அவளிடமும் நிறை, குறைகள் இருக்கும். அவளும் தன்னைப் போலவும், தன் மற்ற ஆண் நண்பர்களைப் போலவும் சரியோ, தவறோ இழைக்க வாய்ப்பிருக்கிறது, என்றெல்லாம் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. இந்தக் காதலுறவில் ஆண்கள், தன் காதலியை மனைவியாக கருதி அடக்க நினைக்கிறார்கள்,.

ஆனால் இன்று வெளியில் படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வந்திருக்கும் இளம் பெண்கள், தங்கள் அம்மாவைப் போன்ற ஒரு அடிமை வாழ்க்கை வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காக, படிப்பையும், வேலையையும் தேர்ந்தெடுக்கிறவர்கள். அவர்கள் எச்சரிக்கையுடன்தான் இருப்பார்கள். அல்லது திருமணம், குடும்ப வாழ்க்கைக்குள் நுழையும் முன் தனக்கான முழு சுதந்திரத்தை அனுபவிக்க நினைப்பார்கள்.

இவர்களிடம் நம் புதிய தலைமுறை இளைஞர்கள் தங்களது ஆண் அதிகாரத்தை காட்டும் போது, அதற்கு எதிர்வினை புரியும் பெண்ணின் நடவடிக்கை இவர்களுக்கு ஈகோவாகத் தெரிகிறது.
அவள், ஆண்களைப் போலவே பல விசயங்களில் நடந்து கொள்வதற்கான சூழலை இன்றைய கல்வி முறையும் வேலைவாய்ப்புகளும் அவளுக்கு அளித்திருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாமல், அதற்கான அறிவில்லாமல் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாவதன் விளைவு இது.

நம் சமூகத்தில் பெண் ஒரு புது விசயத்தைச் சொன்னாலே அதை ஈகோவாகவும், திமிராகவும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். தனிப்பட்ட காதலுறவில் இந்தச் சிந்தனை தன் வேலையைச் செய்கிறது.

அடிப்படையில், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்பது மாறி, கல்லானாலும் காதலனாகப் போகிறவன், புல்லானாலும புருசன் ஆகப் போகிறவன் என்று இருக்கச் சொல்கிறார்கள். இன்றைய தலைமுறைப் பெண்கள் அதற்கு தயாரில்லை. அதை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்புக்கு, இந்த ஆணுலகம் அவர்களைத் தண்டித்துக் கொண்டிருக்கிறது.

எந்தப் பெண்ணும், தன காதல் தோல்விக்காக காதலனை தாக்கியதில்லை. தன்னைத்தான் மாய்த்துக் கொள்வாள். அப்படி இறந்து போகிற பெண்களை இந்த சமூகம் ‘காதலுக்காக உயிரைவிட்ட பெண், அவளது காதல் உண்மையானது‘ என்றெல்லாம் பாராட்ட மாட்டார்கள். ‘,,,,,,எவன்கிட்டயோ ஏமாந்துட்டு வந்துட்டா,,,,,,‘ என்றுதான் சொல்வார்கள்.

காதல் தோல்வியை கடந்து வாழும் பெண்களை இவர்கள் அணுகும் விதத்திற்கு நயன்தாராதான் உதாரணம். அவர்கள் பொதுவாழ்வில், எந்தத் துறையில் சாதித்தாலும் நம் மக்கள் அதை மட்டும் மறக்காமல் மனதில் வைத்திருப்பார்கள்.

கடந்த இரண்டு மூன்று மாதங்களில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனவர்களில் 2,3 பெண்களும்தான் இறந்திருக்கிறார்கள். ஆனால் ஊடகங்கள் காதல் தோல்வியால் இறந்து போன, மன உளைச்சலுக்குள்ளான இளைஞர்கள் என்றுதான் கண்ணீர் வடிக்கிறது. (இளைஞர்கள் என்ற சொல்லை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாக, நாம் எப்பொழுதுமே பயன் படுத்துவதில்லை.)

நிலவும் காதல் பல்லவிகளெல்லாம் நிலவும் ஆணாதிக்க, சாதிய, வர்க்க பின் புலத்தில் உருவானவை. ஆண், பெண்ணை தன் சக தோழியாக, மனுசியாக மதித்து நடத்தும் சமூகம் வரும் வரை, இது போன்ற காதல் கூத்துக்கள், கொடுமைகள், கொலைகள், தற்கொலைகள் எல்லாம் தொடர்கதையாகத் தான் இருக்கும்.

சமூகத்தின் அனைத்து பிற்போக்கு விசயங்களையும் எதிர்க்கிறவர்கள், காதலுக்குள் ஊடுறுவியிருக்கும் பிற்போக்கு தன்மைகளை கேள்விக்குள்ளாக்காமல், சரிப்படுத்த முயற்சிக்காமல், சினிமாவில் காட்டப்படும் புல்லரிப்புக் காதல்களை அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்வதும், அதை வரவேற்பதும் இது போன்ற பல உயிரிழப்புகளைத்தான் ஏற்படுத்தும்.