Saturday, June 4, 2011

மௌன பாலை

எது எதை

எவ்வப்பொழுது

எப்படியெப்படி

உரையாடுவதென்கிற

தியானிப்பில்

நம் உறவில்

விரிந்து கிடக்கிறது

பெருமௌன பாலை ஒன்று!

பல்லி

அந்தப் பல்லிக்கு

முளைத்த புதிய வால்

பிளாஸ்டிக்கால் ஆனது


தன் முதல் வாலை

இழந்த கணத்தை

அது அறிந்திருக்க வாய்ப்பில்லை

உயிரை இழக்காது

வாலை மட்டும் இழந்த

இயற்கையின் மகத்துவத்தையும்

அது அறிந்திருக்க வாய்ப்பில்லை


இன்று பிடித்து தின்ற

பூச்சியின் பெயரையோ

தன் உயிர் பறிக்க வந்த

பூச்சியையோ மனிதனையோ

அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை


வயிற்றினுள் முட்டை வைத்திருக்கும்

பல்லியை விரட்டிச் செல்லும்

அந்தப் பல்லி

தினமும் வேவு பார்க்கப்படுவதையும்

அது அறிந்திருக்க வாய்ப்பில்லை


அறிவே இல்லாத பல்லிகளும்

அறிவுக்கூரிய பல்லிகளும்

வெள்ளை மாளிகைகளில்

வசிப்பதையும்

வசிப்பவர்களையும்

நேசிக்கின்றன ஆராதிக்கின்றன.

குட்டிப்புலி



புலிக்குட்டி போன்றே
இருந்தது அந்தப் பூனை


சாதுர்யமாய் எடுத்து வைக்கும் அடி
பார்க்கும் பார்வை
ஓய்வில் கம்பீரம்
வணங்காத குணம் என்று


எங்களோடு ஒருவராய்
அது வாழ்ந்த போது,
ஏதிலியாய் வந்த
புதிய பூனையின் வரவால்
எங்களை
உதறிவிட்டு சென்றது


ஏதிலி பெண்ணென்றறிந்த பின்
இணையாக்கி கொண்டது.
தலைமுறைகளை வளர்த்தது
எங்களைப் போலவே
ஒவ்வொன்றும் ஒருவிதமாய்
ஆனால் தோற்றத்தில் ஒரே மாதிரியாய்

எதிரிகள்
எங்களின் மீதான வன்மம் தீர்க்க
ஒவ்வொன்றாய் கொன்றனர்


எதிரிகள்தான் கொல்கின்றனர்
என்றறிந்தும்
ஏதும் செய்ய இயலாதிருந்தோம்


சகுனம் சரியில்லையென்ற
சாக்கில் பிடித்துப் போய்
அடித்துக் கொன்றிருக்கலாம்


பிரத்யேக வலையில்
சிக்க வைத்து
கழுத்தை நெறித்திருக்கலாம்


முள்கம்பி
பெட்டிகளில் அடைத்திருக்கலாம்


வன்மத்தின் உச்சத்தில்
நினைத்துப் பார்க்கவே முடியாத
கொடூரங்களை நிகழத்தியிருக்கலாம்
எங்கள் குட்டிப் புலிகளிடம்


இறந்து போன ஒவ்வொன்றும்
உயிர் பிரியும் கணத்தில் கூட
நினைத்திருக்குமோ
எங்களது வருடலை

எதிர்பார்த்து எதிர்பார்த்து
உயிரை விட்டிருக்குமோ
நம்மினத்தவர் நம்மை
காக்க வருவார்களென


புலியோ
பூனையோ
பொதுமக்களோ
வாழ்வது கடினம்
சாவது எளிது

ஞாபகம்

பின்னிரவு நேரத்தின்

தொலை தூர

இரயிலோசையென

கடந்து போய் விடுகிறது

காலம்,

வலி,

மகிழ்ச்சி,

வாழ்வு,

மரணம் என

அனைத்தும்

நம்மை

பரிதவிக்க விட்டு விட்டு.

சீட்டாட்டம்



உன்

ஆழ்மன சீட்டுகளை

என்னிடம்

கலைத்துப் போடுவது

இதோடு

90 ஆவது முறை

ஒவ்வொரு முறையும்

ஒரே கட்டை

ஓராயிரம் விதமாய்

கலைத்து

அடுக்கி

பிரித்து

போடுகிறாய்

எதை மெய்ப்பிக்க

இந்த ஆட்டம்?