Wednesday, April 25, 2012

பூமிக் குழந்தையின் கதைகள் : சமயவேல்


 இந்திமொழிப் புனைகதைப் பரப்பில் நிறைய இளம்பெண்கள் புதினங்கள், சிறுகதைகள் எழுதிக் குவிக்கிறார்கள், அனால் அவை ஆபாசமாக, மிகவெளிப்படையாக, சுயசரிதைப்பாங்கில் இருப்பதாக இந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விபூதி நாராயண் ரை ஒரு பொதுவிழாவில் பேசியதற்கு அந்தப் படைப்பாளிகள் எழுப்பிய கண்டனம் ஜனாதிபதிவரை போனதாக ஒரு செய்தி படித்தேன். தமிழிலும் கவிதைப் பரப்பில் இயங்கிவரும் பல தோழியர்களிடம் புனைகதைகள் எழுதுமாறு வேண்டிக் கொண்டேன். ஆண்-மைய தமிழ் வாழ்வின் எல்லாப் பக்கங்களையும், குறிப்பாகப் பெண்களின் உள்மன விகாசங்களை, அவர்களால் மட்டுமே எழுத முடிகிற எல்லாவற்றையும் எழுத வேண்டிய கடமை பெண் படைப்பாளிகளுக்கு இருக்கிறது என்று கூறிக்கொண்டு வருகிறேன். இந்தவகையில் இந்திராவின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஒரு சிறிய தொடக்கம் எனலாம். அரசியல் பிரக்ஞை, சாதிய எதிருணர்வு, பகுத்தறிவு நோக்கு எல்லாம் கொண்டதொரு பெண்ணின் சொந்தப் பார்வையில் எழுதப்பட்ட கதைகளைப் படிப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. இத்தொகுப்பின் கதைகளின் பின்னாலும் கதைவரிகளின் ஊடாகவும் இயங்கும் படைப்பாளியின் மனவோட்டங்கள் நாம் முற்றிலும் எதிர்பாராதவைகளாக இருக்கின்றன. பெண்ணியம் என்ற சொல் கூட அவசியமில்லை. உறவுகளில், நிகழ்வுகளில், அன்றாட வாழ்வில் இவர் பார்க்கிற தவறான எதையும் தப்பவிடாமல் கவனிக்கிற கூர்மையான நோக்கும், அது சார்ந்த அறச் சீற்றமும், உடனடி எதிருணர்வும், அதே நேரத்தில் மானுடம் சார்ந்த மெல்லுணர்வுகளும் கொண்ட வித்தியாசமான படைப்பாளியாக இருக்கிறார் இந்திரா.

                      பெண்கள் மென்மையானவர்கள் என்கிறார்கள். உடல் சார்ந்த ஸ்பரிச மென்மை அல்ல, மனதின் மென்மை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கலாம்தானே? படைப்பாளிகளின் ஆதார உணர்ச்சியான இந்த மென்மையை இரண்டு சிறுகதைகளில் நாம் சந்திக்கிறோம். 'கறுப்புக் கோழி' கதையில் வளர்த்த கோழியை அறுக்க முடியாத அளவிற்கு மென்மனதுக்காரர்களாக இவரும் இவரது அண்ணனும் அமைகிறார்கள். கதையின் கடைசிப் பத்தியில், கொல்வதற்கு லாயக்கற்ற மென்மனதைக் கோழியிலிருந்து, ஆடு, மாடு, மனிதன் என்று நீட்டித்து, கொல்லுதல் பற்றிய ஒரு தீர்க்கமான இறுதிக்கருத்தை அடைய முடியாமல் அச்சமுறும் அவரோடு சேர்ந்து நாமும் திகைத்து நிற்கிறோம். உறைய மறுக்கிற ஒரு சொட்டுக் குருதி போல கதை நின்றுவிடுகிறது.

                      இந்த மென்மனது 'அணில் குட்டி' கதையில் அதன் முழுப்பரிமாணத்தில் இயங்குகிறது. குழந்தைகளைக் கண்டு பேய்கள் கூட அன்பு காட்டும். ஆனால் இந்த நவீன மனிதர்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறைக்கு அளவே இல்லை. மூத்தவள் சிறியவள் என்னும் இரண்டு குழந்தைகளைப் பற்றிய இந்தக் கதையில் அப்பா, தாத்தா, அம்மா, பாட்டி என எல்லோருமே தங்கள் இயல்பான நடவடிக்கைகள் மூலமே, அந்த மூத்த குழந்தையை ஏமாற்றி இழிவு செய்து காயப்படுத்துகிறார்கள். அப்பா சொன்னபடி பிங்கோ வாங்கிவராமல் ஏமாற்றுகிறார். தாத்தாவோ செருப்புப் போடப் போன குழந்தையை ஏமாற்றி நிற்க வைத்துவிடுகிறார். ஆனால் குழந்தைமை என்பது இயற்கையின் ஒரு கூறு. மனித வளர்ச்சிப் பருவங்களில் துள்ளலும் குதியாட்டமும் கொண்ட குழந்தைப்பருவம் அந்தக் காயம்பட்ட குழந்தைக்கு ஒரு அணில் குட்டியைக் காட்டித் தருகிறது. அணில் குட்டி இயற்கையின் அன்பளிப்பு. அது எல்லாவகைச் சுதந்திரத்தோடும் ஆனந்தமாக விளையாடிபடி, இந்தப் புண்பட்ட குழந்தைக்கும் விளையாட்டுக் காட்டி அதை மீட்டுகிறது. குழந்தையின் கண்களில் அணில்குட்டி படுவதைப் போலவே தான் இந்தக் குழந்தை மற்றும் அணில் குட்டி இருவருமே இந்திராவின் கண்களில் படுகிறார்கள். மென்மனதின் அடியில் படைப்பின் சாரம் தங்குகிறது. .

                     சாதியம் பற்றிய கவனங்களை இரண்டு கதைகளில் முழுமையாகவும் பிற கதைகளில் ஓரிரு இடங்களிலும் காண்கிறோம். 'மனதின் நாற்றம்' என்னும் கதை வாடகை வீட்டில் இருப்பவர்களின் துயரங்களைச் சொல்கிற கதை எனினும் கதையின் கடைசி வரியில் வருகிற சாதிய நூல் சட்டென நம் கழுத்தைச் சுற்றுகிறது. அந்த சாக்கடை நாற்றங்களைவிடக் கொடிய நாற்றத்தை அந்த ஒரு வரி மூலம் கதை முழுமைக்கும் பூசிவிடுகிறார். 'மெரீனாவில் காரல் மார்க்ஸ்' என்ற கதையில் சாதியம் ஜ் வர்க்கம், இடதுசாரி அரசியல் எனும் விவாதம் ஓர் அற்புதமான எள்ளலாகக் கதையாகிவிடுகிறது. 'தோழர் சமூகம் வேறயா சாதி வேறயா, என்ன?' வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற குறும்பு வரிகள். கடைசியில் பெருசை மெரீனாவில் பருத்திப்பால் விற்க வைத்ததோடல்லாமல் 'அவர் என்ன சாதியோ' என்ற பகடியுடன் கதை முடிகிறது. பொலிட்பீரோக்களில் பல ஆண்டுகளாக நடந்த விவாதத்தை இந்தச் சிறிய கதைக்குள் முடித்து வைக்கிறார் தோழர் இந்திரா. மாய எதார்த்தவாதம் இந்தக் கதையில் தற்செயலாக ஒரு கருவியென செயல்பட்டிருப்பதைப் படைப்பாளிகள் கவனிக்க வேண்டும்.

           இது போன்று மேலும் இரு மாய விநோதக் கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. 'பல்லி விழுந்த பலன்'  சுத்த சங்கீதம் போன்று ஒரு சுத்த கதை. பல்லி, நாய்க்குட்டி, மண்புழு என்று வடிவம் மாறும் உயிரினுடனான மனித உரையாடல் அதே ஆச்சர்யங்களுடனும் அதே பதற்றத்துடனும் அதே பயங்களுடனும் தொடர்கிறது. சுழலும் விநோதங்களுடன் சுழலும் வரிகளுக்குள் கதையைப் படிக்க மட்டும் செய்தால் போதும். கதை என்ன சொல்ல வருகிறது என்று யாரும் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். இது சுத்த சங்கீதம் போன்று, ஒரு சுத்த கதை. 'அது பல்லி விழும் பலன் அடிப்படையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நாய்க்குட்டியாக மாறிவிட்டது.'
           இதே மாதிரி இன்னொரு பகுத்தறிவுக் கதை சூரிய கிரகணம். பகுத்தறிவுக் கட்சியின் பேரன்களின் குடும்ப அரசியலை மென்மையாக எள்ளல் செய்யும் அரசியல் கதையாக மாறிவிடுகிறது. பகடியும் தீவிரமும் சரிசமாய்க் கலக்கும் எழுத்தில், ஒரு கீற்றை புதுமைப்பித்தனிடமிருந்து இவரும் பெற்றிருக்கிறார் என்பதை இத்தொகுப்பின் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

            இவரது மனவோட்டத்தில் இவர் எப்படியெல்லாம் மிகச் சரியாக சிந்திக்கிறார், வாழ்வை எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதைக் காட்டிக் கொடுக்கும் கதையாக  'ஒன்னு...ரெண்டு...மூணு...' என்னும், இந்திரா சவாசனம் செய்ய முயற்சிக்கும் கதையைக் கூறலாம். இவரது வாழ்வை ஒரு சவாசனமாக மாறவிடாமல் செய்வதற்காகத்தான் இவர் கதையே எழுதுகிறார் என்று எண்ணுகிறேன்.
            'மயானத்தின் குழந்தை' (தலைப்பே இவ்வளவு கொடுமையாக இருக்கிறது) என்பதுவும் மாயவிநோத வகைக் கதைதான். இந்தக் கதையின் ஒவ்வொரு வரியும் நமது நடப்பு வாழ்க்கை பற்றிய கூர்மையான விமர்சனம். ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அதனுடன் இருக்கும் பரிசுத்தமான வெள்ளை மனசோடு இந்த உலகுக்குள் நுழையவே முடியாத பெருந்துக்கத்தை இந்தக் கதை முழுவதும் விளையாட்டாக எழுதி நிரூபிக்கிறார். குழந்தை கேட்கும் கேள்விகளும், கிடைக்கும் பதில்களினால் அது அடையும் கோபங்களும் ஆச்சர்யங்களும் பதற்றங்களும் இந்திராவினுடையவைதான். அவை நம் எல்லோருடையதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்திராவின் ஆசையாக இருக்க வேண்டும். திட்டமிடாமலேயே சமகால வாழ்வின் பல முகங்களையும் அநாயசமாக தொட்டுச் செல்லும் மிகச்சிறந்த கதையாக இது அமைந்துவிடுகிறது. பூமியின் குழந்தை என்பது இவருக்கு மயானத்தின் குழந்தையாம். 

           சமகாலப் படைப்பாளிகளுக்கிடையிலான உறவுகள், முக்கியமாக, கூட்டம் கூடுதல் பற்றி இரண்டு கதைகள் இருக்கின்றன. பிரம்மாண்டமான வரியுடன் தொடங்கும் 'அவன் அவள் மற்றும் அவர்' என்னும் கதை நாம் எல்லோரும் அறிந்த 10 முதல் 20 நபர்கள் கொண்ட கன கச்சிதமான இலக்கியக் கூட்டத்தில் ஒரு படைப்பாளித் தம்பதியர் கலந்து கொள்வது பற்றியது. ஒரு சாதரணக் கதைபோல் இருந்தாலும் மூத்த எழுத்தாளர் ஒருவர் அந்தப் பென்ணை அசூயையாகப் பார்ப்பதையும் புறக்கணிப்பதையும் யார்தான் பொறுக்க முடியும்? இத்தினியூண்டு கூட்டத்தில்கூட சில ஆஆளுமைகள் தங்களுக்குப் பிடிக்காத சக படைப்பாளிகளையும் இளம் வாசகர்களையும் கண்டுக்காமல் புறக்கணித்துச் செல்லும் லாவகங்களை ரசித்திருக்கிறேன். ஆனால் பக்கம் பக்கம் நிற்கிற கணவன் மனைவியரில் ஒருவரிடம் மட்டும் உரையாடும் முன், புன்னகையுடன் ஒரு மன்னிக்கவும் கூறிவிட்டு உரையாடலாம்தான். சமநிலையில் நிற்கும் பெண்களுடனான பொதுவிடக் கலாச்சாரம் நாம் அறியாதது. பெண்களே அற்ற பொதுவெளிகளில் மட்டுமே உலவத்தெரிந்த ஆண்தமிழர்கள் நாம்.

                 இதைவிடவும் காரமான கதை 'பொய்யாலானது'. இந்தக் கதையில் சித்தரிக்கப்படும் கூட்டத்திற்கு நானும் போயிருந்தேன். முன்னுரை விவகாரம் இவரைப் பெரிதும் காயப்படுத்தியிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. சமகாலத் தமிழ்ப் படைப்புலகில் ஒரு கணிசமான இடத்தைப் பெற்றிருக்கும் பெண் படைப்பாளிகளிடம் ஆண் படைப்பாளிகள் நடந்துகொள்ளும் விதம் பற்றி பெரும் கவலையும் உளைச்சலும் கொள்ளச் செய்யும் கதை இது. அதுவும் நட்பையும் தாண்டிய நெருக்கமான படைப்பாளிகள், குறிப்பாகக், காதலர்கள் அல்லது தம்பதிகள் தங்களது படைப்புத்தளம் உறவுத்தளம் இரண்டும் உராய்வு கொள்கிற நுட்பமான தருணங்களை எதிர்கொள்வது பற்றிய பதிவுகளோ முன்னுதாரணங்களோ நம்மிடம் இல்லை. திரைப்படத்துறையின் சில புகழ்பெற்ற ஆளுமைத்தம்பதிகள் பற்றிய பெருங்கதைகளை மட்டுமே நமக்குத் தெரியும். தீவிரப் படைப்பாளிகளில் ஒருவரும் தங்களது துணையுடனான ஆனந்தங்களை, கீறல்களை, வலிகளைப், போராட்டங்களை வெளிப்படையாக எழுத முடிந்ததில்லை. பூடகமான கதைகளையும் கவிதைகளையும் நாம் நிறையப் படித்திருக்கிறோம். நம் காலம் மிகுதியும் போலியானதென அறியும் பொழுது பெருந்துக்கமாக இருக்கிறது.

             தொடர்ந்து இந்திரா கதைகள் எழுத வேண்டும். இன்னும் ஆழமான அனுபவங்களை எழுத வேண்டும். பெண் எழுத்தாளர்களின் அச்சமற்ற, சுதந்திரமான சொந்த எழுத்துக்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்த்துக்களுடன்,


சமயவேல்
15-12-2011

***

(விரைவில் ஆழி பதிப்பக வெளியீடாக வெளிவர இருக்கும் எனது சிறுகதை தொகுப்பிற்கு கவிஞர் சமயவேல் எழுதிய முன்னுரை)


Saturday, April 7, 2012

நீட்சே வாழ்வும் தத்துவமும் ஓர் அறிமுகம் மொழிபெயர்ப்பு நூலுக்கான முன்னுரை


மேற்கத்திய தத்துவ வரலாற்றை பதிவு செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் வில் ட்யூரண்ட் ஆவார். இவர் எழுதிய `தத்துவத்தின் கதை` (The Story of Philosophy) எனும் நூல் பல முறை பதிப்பிக்கப்பட்டு இலட்சக் கணக்கான பிரதிகள் உலகெங்கிலும் விற்பனையாகி உள்ளன, இன்றும் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன, இதற்கு முக்கிய காரணம் பல நாடுகளில் உள்ள தத்துவ ஆர்வலர்கள் தத்துவ வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ள உதவும் நூலாக இதைக் கருதுவதே ஆகும். சுமார் ஐநூற்று ஐம்பது பக்கங்கள் கொண்ட இந்நூலில் நாற்பத்தி ஏழு பக்கங்களில் இருத்தலியலாளர் நியெட்ஸே குறித்து எழுதப்பட்டுள்ளது, மிகவும் ஆழமாக ஆனால் அழகாக, எளிமையாக எழுதியுள்ளார் வில் ட்யூரண்ட். அதை அதன் அழகியல்தன்மையும், தத்துவ அம்சங்களும் சற்றும் பிசகாமல் இந்நூலில் மொழி பெயர்த்தளித்துள்ளார் இந்திரா காந்தி.

மேற்கத்திய தத்துவ வரலாற்றைப் புரட்டும் போது, அதில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு விதமான சிந்தனைப் போக்கு கோலோச்சுவதைக் காணமுடிகின்றது. வாழ்வின் அர்த்தத்திற்கான தேடல் என்பதை சாக்ரடீஸ் காலம் முதற் கொண்டு தத்துவ வரலாற்றாளர்கள் வகைப்படுத்தியுள்ள போதிலும், அதை மிகவும் பிரதானமாகக் கொண்டு தங்களின் தத்துவப் போக்கை உருவாக்கியவர்கள் இருத்தலியலாளர்கள். இவர்களின் முன்னோடி நியெட்ஸே ஆவார். ஏசுவின் பிறப்பிற்கு சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின் மேற்குலகில் அறிவு தீர்க்கமாக செயல்படத் தொடங்கியது. ``சந்தேகப்படு எல்லாவற்றையும்! சந்தேகப்படுபவரைத் தவிர`` எனும் டேக்கார்ட்டின் அறைகூவல் மேற்குலகின் அறிவியல் வளர்ச்சிக்குக் கட்டியம் கூறியது. சந்தேகப்படு எனக் கூறியது எல்லாவற்றையும் விசாரணைக்குட்படுத்துவது, முறைப்படி ஆராய்வது எனும் பொருளிலே கூறப்பட்டதாகும்! கடவுளின் இருப்பை விசாரணைக் குட்படுத்தும் எந்த ஒரு செயலும் மிகவும் கடுமையான தண்டனைக் குட்படுத்தப்பட்ட காலம் அது. எனவே டேக்கார்ட்ஸ் கடவுளின் இருப்பை ஒருபுறம் தக்க விவாதங்களோடு நிரூபித்துவிட்டு, பிற விசாரணைகளை மேற்கொண்டு தத்துவ வரலாற்றை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தினார் எனலாம். ஆனால் கடவுளின் இருப்பையும், தொழில் நுட்பங்களின் அபரித வளர்ச்சியையும் இரு மோசமான விஷயங்களாக இருத்தலியலாளர்கள் பலரும், பின் நவீனத்துவவாதிகளும் நோக்கினார்கள். நவீனத்துவம் எல்லா அறிவு சார்ந்த செயல்பாடுகளையும், ஒட்டு மொத்த, ஒரு தர்க்க ரீதியான அறிவியல் கட்டமைப்பிற்குள் அடைத்து, சாதனை அல்லது சோதனை எனும் நோக்கில் இட்டுச் செல்கிறது. விளைவு... மனித நேயம் என்பதும், தனிமனித மாண்பு, சமுக நீதி போன்ற மதிப்பீடுகள் அறிவியலினால் கபளீகரம் செய்யப்படுகின்றன. `வெற்றிஎன்பதே அதன் ஒரே இலக்காகிவிட்ட நிலையில் சாதாரணர்கள் அந்த வெற்றியினால் நசுக்கப்படுகிறார்கள் என்பதே இவர்களின் பார்வை!

தனிமனிதனின் இருப்பு பலத்த நெருக்கடிக்குள்ளாகியதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் நியெட்ஸே. யூத-கிறிஸ்துவ சமய மதிப்பீடுகள் எவ்வாறு மானுட வாழ்வை பீடித்து வாழ்வை சீக்கு பிடிக்க வைக்கின்றன என்பதை விளக்கி அவற்றிலிருந்து மானுட இருப்பை விடுதலை செய்வதே வாழ்வின் முக்கிய நோக்காக கொண்டார் எனலாம். அதற்காக அறம் அற்ற வாழ்வை முன் மொழியவில்லை. மாற்றாக மதிப்பீடுகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றார். இதனடிப்படையில் கடவுளின் இறப்பை உலகிற்கு மிகவும் துணிச்சலாக அக்காலக் கட்டத்தில் பிரகடனப்படுத்தினார். நியெட்ஸேவின் ஜராதுஷ்ட்ரன் ஒரு அதீத மனிதன் (Superman) புதிய மதிப்பீடுகளை உருவாக்குபவன். அவன் தலைவனுக்குரிய மதிப்பீடுகளைக் கொண்டவன். புதியதோர் உலகு செய்பவன். மானுடம் சிறக்கச் செய்பவன். அம்மாதிரியான ஜராதுஷ்டிரர்கள் தலைமை பண்பு கொண்டவர்கள். அதே சமயம் அடிமை மதிப்பீடுகளைக் கொண்ட சமயங்களும், கடவுள்களும் தங்கள் சொல்படி விமர்சனமின்றி அப்படியே ஒட்டி ஒழுகும் அடிமைகளை உருவாக்கியுள்ளன. அடிமைகள் புதியன படைப்பதில்லை! போட்ட பாதையில் பாதுகாப்பாக பயணிப்பவர்கள்! தலைவர்கள் புதிய உலகிற்காக, மதிப்பீடுகளுக்காக வாழ்க்கையை துச்சமாக மதிப்பவர்கள். அடிமைகளின் அளவுகோலின்படி நன்மை (goodness) என்பது அடக்க ஒடுக்கமானது, கருணையானது, கட்டுப்பாடானது, நழுவக் கூடியது. அதேசமயம் தீமை (evil) என்பது சுயநலம், கொடூரம், வளம், வேகம் கொண்டது. நியெட்ஸே `நன்மை` என்பது மக்களை அடிமைகளாகவே வைத்திருப்பதற்காக உண்டாக்கப்பட்ட மதிப்பீடுகள். இதன் மூலம் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு கூட்டம் என கருதினார். `நல்லவர்கள்` என்பவர்கள் `அடிமைகள்` என்ற கருத்து நியெட்ஸேவின் தத்துவ அதிரடி எனலாம். அவர்கள் சமுகத்தின் `தீமைகள்` எனவும் பிரகடனம் செய்தார்.

அதிகாரத்திற்கான விருப்பாற்றல்` எனும் கருத்தையே நியெட்ஸேவின் தத்துவம் அடிநாதமாகக் கொண்டது. அதிகாரத்தை பெறுவது என்பதை அவர் வலியுறுத்தினார். அது அடக்குமுறைக்கான அதிகாரம் அல்ல! விடுதலைக்கான அதிகாரம்! பழைய மதிப்பீடுகளை து£க்கி எறிவதற்கான அதிகாரம்.

நியெட்ஸேவின் தத்துவப் போக்கு பலரை பலவிதமாக ஈர்த்தது. பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலதுசாரி ஜெர்மானிய போர்வீரர்களுக்கு முதலாம் உலகப் போரின் போது நியெட்ஸேவின் Ôஜராதுஷ்ட்ரா இவ்வாறாகப் பேசினான்` எனும் நூல் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. சில இடதுசாரிகள் நியெட்ஸேவின் வாரிசுகள் எனவும் அழைக்கப்பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் பல அரசியல் தலைவர்கள் நியெட்ஸே தான் தங்களை மிகவும் ஈர்த்த தத்துவவாதி எனவும் பிரகடனப்படுத்தியுள்ளனர். நியெட்ஸேவின் எந்த ஒரு நூலையும் வாசித்திராத ஹிட்லர் நியெட்ஸேவின் தத்துவ ஈர்ப்பினால்தான் சர்வாதிகாரியானான் என்ற கருத்தும் நிலவுகிறது. முஸோலினி, ருஸ்வெல்ட் போன்றோர் நியெட்ஸேவினால் மிகவும் ஈர்க்கப்பட்டவர்கள்.

நியெட்ஸேவின் மானுட விடுதலைக்கான அறைகூவல்கள் மற்றும் அடிப்படையை உடைக்கும் தத்துவ விசாரங்களே பின்னர் இருத்தலியலாளர்கள் கேம்யூ, சார்த்தர், ஹைடெக்கர் போன்றோர் தங்கள் தத்துவங்களைப் படைக்க அடிப்படையாக இருந்தன. இருத்தலியம் மேற்குலகின் வாழ்வியல் உலகை விசாரணைக்குட்படுத்தி சலசலக்க வைத்தபின், அதிரடியாய் தோன்றிய பின் நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படை அஸ்திவாரமாக நியெட்ஸேவின் தத்துவம் அமைந்தது. பின் நவீனத்துவவாதிகளான ஃபூக்கோ, டெரிடா, டெல்யூஸ் போன்ற பலரின் தத்துவப் பங்களிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தவர் நியெட்ஸே!

நியெட்ஸே பலவீனமானவர். மனச்சிக்கல் நிறைந்தவர். அவர் அதிகாரமே வாழ்வு எனும் கற்பனா வாதங்களை பறக்கவிட இயலாதவர்` என்றெல்லாம் ரஸ்ஸல் உட்பட பலர் கூறியதுண்டு. நியெட்ஸே காலத்தின் பிரசுரிக்கப்படாத, பிரபலமாகாத அவரின் படைப்புக்கள் பின்னர் சுனாமியாக பாய்ந்து மேற்குலக தத்துவப் போக்கினைப் புரட்டிப் போட்டு, இன்றுவரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது எனலாம். நியெட்ஸேவின் தத்துவ வீரியம் தனிமனித சுதந்திரம் குறித்தது, அது சமுக விடுதலைக்கு உதவாது எனும் இடதுசாரி கருத்தாக்கங்கள் கூட மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதை நியெட்ஸேவின் படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கும் போது தெரியும். சில படைப்புகளே நியெட்ஸே பற்றி தமிழில் வெளிவந்துள்ள போதிலும், மிகவும் ஆதாரப்பூர்வமான எழுத்துக்களாக அறியப்பட்ட வில் ட்யூரண்டின் படைப்பிலிருந்து நியெட்ஸேவை தமிழுலகிற்கு மறுபடியும் அறிமுகப்படுத்தும் பணியை இந்திரா காந்தி செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. எனது மாணவி அவர் என்று சொல்லிக் கொள்ள பெருமைப்பட இந்நூல் மேலும் வழிவகை செய்துள்ளது. அவருக்கு என் பாராட்டுதல்கள்! நன்றிகள்!

முனைவர். இரா. முரளி.

துறைத்தலைவர், தத்துவத்துறை,

மதுரைக் கல்லுரி, மதுரை.