இந்திமொழிப் புனைகதைப் பரப்பில் நிறைய இளம்பெண்கள் புதினங்கள், சிறுகதைகள் எழுதிக் குவிக்கிறார்கள், அனால் அவை ஆபாசமாக, மிகவெளிப்படையாக, சுயசரிதைப்பாங்கில் இருப்பதாக இந்திப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விபூதி நாராயண் ரை ஒரு பொதுவிழாவில் பேசியதற்கு அந்தப் படைப்பாளிகள் எழுப்பிய கண்டனம் ஜனாதிபதிவரை போனதாக ஒரு செய்தி படித்தேன். தமிழிலும் கவிதைப் பரப்பில் இயங்கிவரும் பல தோழியர்களிடம் புனைகதைகள் எழுதுமாறு வேண்டிக் கொண்டேன். ஆண்-மைய தமிழ் வாழ்வின் எல்லாப் பக்கங்களையும், குறிப்பாகப் பெண்களின் உள்மன விகாசங்களை, அவர்களால் மட்டுமே எழுத முடிகிற எல்லாவற்றையும் எழுத வேண்டிய கடமை பெண் படைப்பாளிகளுக்கு இருக்கிறது என்று கூறிக்கொண்டு வருகிறேன். இந்தவகையில் இந்திராவின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஒரு சிறிய தொடக்கம் எனலாம். அரசியல் பிரக்ஞை, சாதிய எதிருணர்வு, பகுத்தறிவு நோக்கு எல்லாம் கொண்டதொரு பெண்ணின் சொந்தப் பார்வையில் எழுதப்பட்ட கதைகளைப் படிப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. இத்தொகுப்பின் கதைகளின் பின்னாலும் கதைவரிகளின் ஊடாகவும் இயங்கும் படைப்பாளியின் மனவோட்டங்கள் நாம் முற்றிலும் எதிர்பாராதவைகளாக இருக்கின்றன. பெண்ணியம் என்ற சொல் கூட அவசியமில்லை. உறவுகளில், நிகழ்வுகளில், அன்றாட வாழ்வில் இவர் பார்க்கிற தவறான எதையும் தப்பவிடாமல் கவனிக்கிற கூர்மையான நோக்கும், அது சார்ந்த அறச் சீற்றமும், உடனடி எதிருணர்வும், அதே நேரத்தில் மானுடம் சார்ந்த மெல்லுணர்வுகளும் கொண்ட வித்தியாசமான படைப்பாளியாக இருக்கிறார் இந்திரா.
பெண்கள் மென்மையானவர்கள் என்கிறார்கள். உடல் சார்ந்த ஸ்பரிச மென்மை அல்ல, மனதின் மென்மை என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கலாம்தானே? படைப்பாளிகளின் ஆதார உணர்ச்சியான இந்த மென்மையை இரண்டு சிறுகதைகளில் நாம் சந்திக்கிறோம். 'கறுப்புக் கோழி' கதையில் வளர்த்த கோழியை அறுக்க முடியாத அளவிற்கு மென்மனதுக்காரர்களாக இவரும் இவரது அண்ணனும் அமைகிறார்கள். கதையின் கடைசிப் பத்தியில், கொல்வதற்கு லாயக்கற்ற மென்மனதைக் கோழியிலிருந்து, ஆடு, மாடு, மனிதன் என்று நீட்டித்து, கொல்லுதல் பற்றிய ஒரு தீர்க்கமான இறுதிக்கருத்தை அடைய முடியாமல் அச்சமுறும் அவரோடு சேர்ந்து நாமும் திகைத்து நிற்கிறோம். உறைய மறுக்கிற ஒரு சொட்டுக் குருதி போல கதை நின்றுவிடுகிறது.
இந்த மென்மனது 'அணில் குட்டி' கதையில் அதன் முழுப்பரிமாணத்தில் இயங்குகிறது. குழந்தைகளைக் கண்டு பேய்கள் கூட அன்பு காட்டும். ஆனால் இந்த நவீன மனிதர்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறைக்கு அளவே இல்லை. மூத்தவள் சிறியவள் என்னும் இரண்டு குழந்தைகளைப் பற்றிய இந்தக் கதையில் அப்பா, தாத்தா, அம்மா, பாட்டி என எல்லோருமே தங்கள் இயல்பான நடவடிக்கைகள் மூலமே, அந்த மூத்த குழந்தையை ஏமாற்றி இழிவு செய்து காயப்படுத்துகிறார்கள். அப்பா சொன்னபடி பிங்கோ வாங்கிவராமல் ஏமாற்றுகிறார். தாத்தாவோ செருப்புப் போடப் போன குழந்தையை ஏமாற்றி நிற்க வைத்துவிடுகிறார். ஆனால் குழந்தைமை என்பது இயற்கையின் ஒரு கூறு. மனித வளர்ச்சிப் பருவங்களில் துள்ளலும் குதியாட்டமும் கொண்ட குழந்தைப்பருவம் அந்தக் காயம்பட்ட குழந்தைக்கு ஒரு அணில் குட்டியைக் காட்டித் தருகிறது. அணில் குட்டி இயற்கையின் அன்பளிப்பு. அது எல்லாவகைச் சுதந்திரத்தோடும் ஆனந்தமாக விளையாடிபடி, இந்தப் புண்பட்ட குழந்தைக்கும் விளையாட்டுக் காட்டி அதை மீட்டுகிறது. குழந்தையின் கண்களில் அணில்குட்டி படுவதைப் போலவே தான் இந்தக் குழந்தை மற்றும் அணில் குட்டி இருவருமே இந்திராவின் கண்களில் படுகிறார்கள். மென்மனதின் அடியில் படைப்பின் சாரம் தங்குகிறது. .
சாதியம் பற்றிய கவனங்களை இரண்டு கதைகளில் முழுமையாகவும் பிற கதைகளில் ஓரிரு இடங்களிலும் காண்கிறோம். 'மனதின் நாற்றம்' என்னும் கதை வாடகை வீட்டில் இருப்பவர்களின் துயரங்களைச் சொல்கிற கதை எனினும் கதையின் கடைசி வரியில் வருகிற சாதிய நூல் சட்டென நம் கழுத்தைச் சுற்றுகிறது. அந்த சாக்கடை நாற்றங்களைவிடக் கொடிய நாற்றத்தை அந்த ஒரு வரி மூலம் கதை முழுமைக்கும் பூசிவிடுகிறார். 'மெரீனாவில் காரல் மார்க்ஸ்' என்ற கதையில் சாதியம் ஜ் வர்க்கம், இடதுசாரி அரசியல் எனும் விவாதம் ஓர் அற்புதமான எள்ளலாகக் கதையாகிவிடுகிறது. 'தோழர் சமூகம் வேறயா சாதி வேறயா, என்ன?' வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற குறும்பு வரிகள். கடைசியில் பெருசை மெரீனாவில் பருத்திப்பால் விற்க வைத்ததோடல்லாமல் 'அவர் என்ன சாதியோ' என்ற பகடியுடன் கதை முடிகிறது. பொலிட்பீரோக்களில் பல ஆண்டுகளாக நடந்த விவாதத்தை இந்தச் சிறிய கதைக்குள் முடித்து வைக்கிறார் தோழர் இந்திரா. மாய எதார்த்தவாதம் இந்தக் கதையில் தற்செயலாக ஒரு கருவியென செயல்பட்டிருப்பதைப் படைப்பாளிகள் கவனிக்க வேண்டும்.
இது போன்று மேலும் இரு மாய விநோதக் கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. 'பல்லி விழுந்த பலன்' சுத்த சங்கீதம் போன்று ஒரு சுத்த கதை. பல்லி, நாய்க்குட்டி, மண்புழு என்று வடிவம் மாறும் உயிரினுடனான மனித உரையாடல் அதே ஆச்சர்யங்களுடனும் அதே பதற்றத்துடனும் அதே பயங்களுடனும் தொடர்கிறது. சுழலும் விநோதங்களுடன் சுழலும் வரிகளுக்குள் கதையைப் படிக்க மட்டும் செய்தால் போதும். கதை என்ன சொல்ல வருகிறது என்று யாரும் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். இது சுத்த சங்கீதம் போன்று, ஒரு சுத்த கதை. 'அது பல்லி விழும் பலன் அடிப்படையில் கண்ணிமைக்கும் நேரத்தில் நாய்க்குட்டியாக மாறிவிட்டது.'
இதே மாதிரி இன்னொரு பகுத்தறிவுக் கதை சூரிய கிரகணம். பகுத்தறிவுக் கட்சியின் பேரன்களின் குடும்ப அரசியலை மென்மையாக எள்ளல் செய்யும் அரசியல் கதையாக மாறிவிடுகிறது. பகடியும் தீவிரமும் சரிசமாய்க் கலக்கும் எழுத்தில், ஒரு கீற்றை புதுமைப்பித்தனிடமிருந்து இவரும் பெற்றிருக்கிறார் என்பதை இத்தொகுப்பின் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
இவரது மனவோட்டத்தில் இவர் எப்படியெல்லாம் மிகச் சரியாக சிந்திக்கிறார், வாழ்வை எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதைக் காட்டிக் கொடுக்கும் கதையாக 'ஒன்னு...ரெண்டு...மூணு...' என்னும், இந்திரா சவாசனம் செய்ய முயற்சிக்கும் கதையைக் கூறலாம். இவரது வாழ்வை ஒரு சவாசனமாக மாறவிடாமல் செய்வதற்காகத்தான் இவர் கதையே எழுதுகிறார் என்று எண்ணுகிறேன்.
'மயானத்தின் குழந்தை' (தலைப்பே இவ்வளவு கொடுமையாக இருக்கிறது) என்பதுவும் மாயவிநோத வகைக் கதைதான். இந்தக் கதையின் ஒவ்வொரு வரியும் நமது நடப்பு வாழ்க்கை பற்றிய கூர்மையான விமர்சனம். ஒரு குழந்தை பிறக்கும்பொழுது அதனுடன் இருக்கும் பரிசுத்தமான வெள்ளை மனசோடு இந்த உலகுக்குள் நுழையவே முடியாத பெருந்துக்கத்தை இந்தக் கதை முழுவதும் விளையாட்டாக எழுதி நிரூபிக்கிறார். குழந்தை கேட்கும் கேள்விகளும், கிடைக்கும் பதில்களினால் அது அடையும் கோபங்களும் ஆச்சர்யங்களும் பதற்றங்களும் இந்திராவினுடையவைதான். அவை நம் எல்லோருடையதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்திராவின் ஆசையாக இருக்க வேண்டும். திட்டமிடாமலேயே சமகால வாழ்வின் பல முகங்களையும் அநாயசமாக தொட்டுச் செல்லும் மிகச்சிறந்த கதையாக இது அமைந்துவிடுகிறது. பூமியின் குழந்தை என்பது இவருக்கு மயானத்தின் குழந்தையாம்.
சமகாலப் படைப்பாளிகளுக்கிடையிலான உறவுகள், முக்கியமாக, கூட்டம் கூடுதல் பற்றி இரண்டு கதைகள் இருக்கின்றன. பிரம்மாண்டமான வரியுடன் தொடங்கும் 'அவன் அவள் மற்றும் அவர்' என்னும் கதை நாம் எல்லோரும் அறிந்த 10 முதல் 20 நபர்கள் கொண்ட கன கச்சிதமான இலக்கியக் கூட்டத்தில் ஒரு படைப்பாளித் தம்பதியர் கலந்து கொள்வது பற்றியது. ஒரு சாதரணக் கதைபோல் இருந்தாலும் மூத்த எழுத்தாளர் ஒருவர் அந்தப் பென்ணை அசூயையாகப் பார்ப்பதையும் புறக்கணிப்பதையும் யார்தான் பொறுக்க முடியும்? இத்தினியூண்டு கூட்டத்தில்கூட சில ஆஆளுமைகள் தங்களுக்குப் பிடிக்காத சக படைப்பாளிகளையும் இளம் வாசகர்களையும் கண்டுக்காமல் புறக்கணித்துச் செல்லும் லாவகங்களை ரசித்திருக்கிறேன். ஆனால் பக்கம் பக்கம் நிற்கிற கணவன் மனைவியரில் ஒருவரிடம் மட்டும் உரையாடும் முன், புன்னகையுடன் ஒரு மன்னிக்கவும் கூறிவிட்டு உரையாடலாம்தான். சமநிலையில் நிற்கும் பெண்களுடனான பொதுவிடக் கலாச்சாரம் நாம் அறியாதது. பெண்களே அற்ற பொதுவெளிகளில் மட்டுமே உலவத்தெரிந்த ஆண்தமிழர்கள் நாம்.
இதைவிடவும் காரமான கதை 'பொய்யாலானது'. இந்தக் கதையில் சித்தரிக்கப்படும் கூட்டத்திற்கு நானும் போயிருந்தேன். முன்னுரை விவகாரம் இவரைப் பெரிதும் காயப்படுத்தியிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. சமகாலத் தமிழ்ப் படைப்புலகில் ஒரு கணிசமான இடத்தைப் பெற்றிருக்கும் பெண் படைப்பாளிகளிடம் ஆண் படைப்பாளிகள் நடந்துகொள்ளும் விதம் பற்றி பெரும் கவலையும் உளைச்சலும் கொள்ளச் செய்யும் கதை இது. அதுவும் நட்பையும் தாண்டிய நெருக்கமான படைப்பாளிகள், குறிப்பாகக், காதலர்கள் அல்லது தம்பதிகள் தங்களது படைப்புத்தளம் உறவுத்தளம் இரண்டும் உராய்வு கொள்கிற நுட்பமான தருணங்களை எதிர்கொள்வது பற்றிய பதிவுகளோ முன்னுதாரணங்களோ நம்மிடம் இல்லை. திரைப்படத்துறையின் சில புகழ்பெற்ற ஆளுமைத்தம்பதிகள் பற்றிய பெருங்கதைகளை மட்டுமே நமக்குத் தெரியும். தீவிரப் படைப்பாளிகளில் ஒருவரும் தங்களது துணையுடனான ஆனந்தங்களை, கீறல்களை, வலிகளைப், போராட்டங்களை வெளிப்படையாக எழுத முடிந்ததில்லை. பூடகமான கதைகளையும் கவிதைகளையும் நாம் நிறையப் படித்திருக்கிறோம். நம் காலம் மிகுதியும் போலியானதென அறியும் பொழுது பெருந்துக்கமாக இருக்கிறது.
தொடர்ந்து இந்திரா கதைகள் எழுத வேண்டும். இன்னும் ஆழமான அனுபவங்களை எழுத வேண்டும். பெண் எழுத்தாளர்களின் அச்சமற்ற, சுதந்திரமான சொந்த எழுத்துக்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாழ்த்துக்களுடன்,
சமயவேல்
15-12-2011
