Thursday, June 9, 2011

தீரா உரையாடல்

எல்லோருக்கும்
எல்லாவற்றையும்
புரிய வைக்க முடியாது
என்பதை அறிந்திருந்தும்
எல்லோரும்
ஏதோ ஒன்றை புரிய வைக்க
எல்லோரிடமும்
எல்லா நேரமும்
முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்.

இட வல பயணம்

முன்பொருமுறை, வேறு வழியின்றி
ஆண்கள் வரிசையின்
ஜன்னலோர இருக்கையில்
இடம் பிடித்தாள் இவள்.

வழக்கமாக சென்று வரும்
வழித்தடம்தான்
அன்று அனைத்துமே புதிதாக இருந்தது.

முதன் முதல் கண்ணாடி பார்த்து
வலம் இடம் புரியாத
குழந்தையைப் போல குழம்பினாள்.

வெளியே
மரங்கள் பின்னோக்கி ஓடாமல்
அவளை நோக்கி வருவதைப் போல இருந்தது.

அந்த இருக்கையிலிருந்து காண முடியாத
தன் நிறுத்தத்தை தவற விட்டு விடுவோமோ
என பதைபதைத்தாள்.

தினமும் அவள் ஏறி இறங்கும்
நிறுத்தம் கூட
அன்று இடம் மாறி இருப்பதாய் நினைத்தாள்.

இன்றும் அப்படித்தான்
நகரத் தொடங்கிய சொகுசுப் பேருந்தில்
பல கண்கள் துரத்த
ஓடி வந்து ஏறிய போது
இவளுக்கென எஞ்சியிருந்தது
நடத்துனரின் இருக்கை.

அமர்ந்து
ஆசுவாசப்படுத்தி தலை நிமிர்கையில்
மரங்களும், செடி கொடிகளும்,
கட்டிடங்களும், பாலங்களும்,
வாகனங்களும், நாய்களும்,
மனிதர்களும்
ஒரு தட்டையான சித்திரக் காட்சியாய்
ஜன்னல் சட்டகத்திற்குள்
ஓடிக் கொண்டிருந்தன/ர்
எதையோ நோக்கி.

அதன் பின்
முழுப் பேருந்தும்
ஒரு திசை நோக்கிப் பயணிக்க
அவள் மட்டும்
வேறு திசை நோக்கிபயணித்துக் கொண்டிருந்தாள்.