Wednesday, June 15, 2011

பன்றிகள்

முதன் முதலில் அதைச் சந்தித்த போது
அதன் தாய் என்னைத் தாக்க வந்தது.
‘பன்றிக்குட்டி அழகாய் இருக்கிறது
வீட்டிற்கு கொண்டு போகலாம்’
என்று அடம் பிடித்த தங்கையிடம்
‘அது மலத்தை தின்னும்’
எனக் கூறி மறுத்தேன்
மலத்தின் பொருள் அறியாது.
கல்லூரி பருவத்தில்
கால் வைக்க இடமின்றி
மலம் குவிந்து கிடந்ததாய்
உணர்ந்த போது மீண்டும்
பன்றிகளை நினைத்தேன்.
மூளைக்காய்ச்சலுக்கு காவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
‘பன்றிகள் குளிப்பதற்காகவே சாக்கடையில்
இறங்குகின்றன’
‘மலம் என்பது மலம் மட்டுமல்ல’
‘மலத்தைத் தின்பது பன்றி மட்டுமல்ல’
என்றறிந்த போது
பன்றிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.