வானவில்
வெயிலோடு பெய்யும் மழை,
காலை நேர மூடுபனி,
சில் வண்டின் சத்தம்,
மென்தென்றல்,
பட்டாம்பூச்சி, பூக்கள்
நிறைந்த
உனக்கும் எனக்குமான புல்வெளியை
பறித்துக் கொண்டு,
உனக்கு
பட்டாம்பூச்சிகளின் சிறகில் ஆணி அடித்து
உள் உறுப்புகளை ஆராயும்
வரமளித்த வாழ்க்கை,
சதுரங்க விளையாட்டு மேடையை
பரிசளித்தது
எனக்கு.
அங்கு
சிப்பாய்கள் நேருக்கு நேராக மோதி மாண்டனர்
சில சமயம் யானைகள் சிப்பாய்களை நசுக்கின
குதிரைகள் யானைகளை கொன்றன
மிஞ்சிய அனைத்தையும்
சாணக்கிய பிஷப்புகள் விழுங்கினர்
சர்வ அதிகாரம் பெற்ற பிஷப்புகள் கூட
சாதுர்யம் இல்லாது மோதி அழிந்தனர்
ஆனால்
ராஜாவால் ராணியையும்
ராணியால் ராஜாவையும்
வீழ்த்தவே முடியாமல்
போரிட்டுக் கொண்டே இருக்கின்றனர்
வரலாறு அறிந்த காலம் முதல்.