Wednesday, June 5, 2013

’நாங்கள் கேட்பதெல்லாம் எங்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதுதான்’ ஜானு, ஆதிவாசிப் பெண் போராளி



சாதாரண மக்களைப் பொறுத்தவரை ஆதிவாசிகள் நாகரீக வளர்ச்சி இல்லாதவர்கள், அறிவு குறைந்தவர்கள், கரடுமுரடானவர்கள். தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை, அரைகுறை உடையுடன் கூட்டமாய் நடனமாடுபவர்கள், மேற்கத்தியர்களுக்கோ மனிதர்களைப் பலி கொடுப்பவர்கள், மனித மாமிசம் தின்பவர்கள்.

இந்த வரையறைகளுக்கெல்லாம ஒரு படி மேலே போய், கேரள அரசு, விலங்குகளுக்குக் கொடுக்கும் மரியாதையைக் கூட அவர்களுக்குக் கொடுக்கவில்லை. கேரள அரசு முத்தங்காவில் ஆதிவாசிகள் சிரமப்பட்டு பண்படுத்திய காட்டு நிலத்திலிருந்து அவர்களை அடித்து வெளியேற்றிவிட்டு, விலங்குகளுக்கு சரணாலயம் அமைத்துள்ளது. அதற்கு மாற்றாக நிலம் தருவதாகக் கூட உறுதியளிக்கவில்லை அரசு. மண்ணின் பூர்வகுடிகளை நிலமற்றவர்களாக்கி பட்டினியால் இறக்கவிட்டது நாகரீகசமூகம். வழக்கம்போல நாகரீகஅரசியல் கட்சிகள் தங்கள் திருகல் வேலைகளை காண்பித்து இப்பிரச்சினையை வெளியுலகிற்கு காட்டாமல் மறைத்து விட்டனர்.

ஜானுவின் தலைமையில் இரண்டு வருடம் முன்பு திருவனந்தபுரத்தில் அரசு செயலகத்தின் முன்னால் குடிசைகளை எழுப்பிக் குடியேறி, அதில் பல சிரமங்களுடன் 47 நாட்கள் போராடினர். அதன்பிறகே கேரள ஏ.கே.ஆண்டனி அரசு நிலம் தருவதாக உத்திரவாதம் அளித்து, குடிசைகளை நீக்க வைத்துள்ளது. அந்த உத்திரவாதமும் வழக்கம்போல ஏமாற்றுதான் என்று உணர்ந்து, 2003 ஜனவரி 3ம் தேதியன்று முத்தங்கா வனப்பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட குடிசைகளை போட்டு குடியேறினர். தங்கள் எல்லைக்குள் வனத்துறையினர் நுழையக்கூடாது என எச்சரித்தனர். அதை மீறி உள்ளே நுழைந்த ஒரு காவலரையும் வனத்துறை ஊழியரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை நிர்பந்தித்தனர்.

ஆனால் பிப்ரவரி 19 அன்று போலீஸ் பெரும்படையுடன் நுழைந்து எதிரிநாட்டு ராணுவத்தினரைத் தாக்குவதுபோல ஆதிவாசிகளைத் தாக்கி, வனப்பகுதியைக் கைப்பற்றியது அரசு. இதில் ஒரு ஆதிவாசியும் ஒரு காவலரும் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. போராட்டத் தலைவர் ஜானு, ஆதிவாசி கோத்ர மகாசன அமைப்பின் வழிகாட்டியான கீதானந்தன் மற்றும் பலர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். ஜானு இப்போது பிணையில் வெளிவந்துள்ளார்.

கயமை நிறைந்த நாகரீக அரசியல் கட்சிகளின் தலைமையிலன்றி, பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரே தலைமையேற்று நடத்திய வீரமிக்க போராட்டத்தால்  ஆதிவாசிகளின் 20 வருட காலப் பிரச்சினைகள், கோரிக்கைகள் வெளியுலகிற்குத் தெரிய வந்துள்ளது. வனப்பகுதியை ஆதிவாசிகளிடமிருந்து கையகப்படுத்தி உள்ளதற்கு அரசும், சுற்றுச் சூழலியலாளர்களும் சொல்லும் காரணம், இயற்கை வளங்களை, வனங்களை, விலங்குகளைப் பாதுகாக்கிறோம் என்பதுதான். நம் மக்களும் சரிதானே, ஆதிவாசிகளிடம் காட்டை விட்டால் அழித்து மொட்டையாக்கிவிடுவார்களே (!! ) என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? அரசு இதுவரை எந்த அளவிற்கு இயற்கை வளங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறது? இயற்கை வளங்களைப் பாதுகாக்க நிறையச் சட்டங்கள், திட்டங்கள் அமுலில் இருக்கத்தான் செய்கினறன.

ஆனால் அவற்றிற்குப் புறம்பாக அணைகள் கட்டுவது, மரங்களை வெட்டுவது, மலைகளைப் பிளப்பது, சுரங்கங்கள் தோண்டுவது, போக்குவரத்துச் சாலைகளை அமைப்பது என்று எதிர்கால அபாயங்கள் பற்றிய எந்த அறிவோ, கவலையோ இல்லாமல் லாப நோக்கோடு இயற்கை வளங்களை அழித்து தீர்த்து விட்டார்கள். கடும் புயல், வெயில், வறட்சி, நிலநடுக்கம் எல்லாமே இந்த நாகரீக அரசுகள் இயற்கை வளங்களைப் பாதுகாத்த இலட்சணத்தின் விளைவுகள்தான். இன்று கொஞ்சநஞ்சம் மிஞ்சி நிற்கும் வனம், வன உயிரிகள், இயற்கை வளங்கள் போன்றவற்றிற்காக நாம் ஆதிவாசிகளுக்குத்தான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆதிவாசிகள் காடுகளோடு உடலாலும், மனதாலும, உணர்வாலும் பின்னிப் பிணைந்தவர்கள். காடுகள் அவர்களது வாழ்வில் ஓர் அங்கம். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, மண்வளம், பருவநிலை மாற்றம் குறித்த அவர்களுடைய அறிவின் முன், நம் நாகரீக இயற்கை வளம் காக்கும்பல்கலைக்கழக அறிவுக் கொழுந்துகள் வாய்மூடி நிற்க வேண்டிய நிலைதான் இன்றும் இருக்கிறது. தாவர வகை பிரிப்புத்துறையில்  பட்டம் பெற்றவர்களை விட ஆதிவாசி மூலிகை மருத்துவர்களின் தாவரவியல் ஞானம் அசாதாரணமானது. நாம் பேசும் நாகரீக மொழியில் பிறமொழிக் கலப்பின்றி பல தாவரங்களின் பெயர்களை சொல்ல முடிவதில்லை. ஆனால் அவர்களின் மொழி, நூற்றுக்கணக்கான தாவரங்களை பிறமொழிக் கலப்பின்றி ஒற்றைச் சொல்லில் குறிப்பிடுமளவிற்கு  இயற்கை வளமிக்கதாய்  இருக்கிறது. நாகரீகச் சமூகம் பல நல்ல தாவர மரவகைகளை அழித்ததோடு மொழியின் இயற்கை குறித்த சொல்லாடல்களையும் அழித்து விட்டது. ஆதிவாசிகள் ஒரு போதும் மருந்துக்காகப் பயன்படும் மூலிகைகளை வேரோடு அழிப்பதில்லை. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை வேரோடு வெட்டி எறிந்து விட்டு, மழையே பொழிய முடியாத நிலைக்கு இயற்கையை ஆளாக்கி அதன் பின் மழைநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யத் தெரியாது ஆதிவாசிகளுக்கு.

 சரியாகச் சொன்னால், இயற்கையின் மொழியைப் புரிந்து  கொள்ளும் திறனும் அறிவும் இவர்களுக்கு மட்டுமே உண்டு. இயற்கையின் செழிப்பான காலங்களையும், பற்றாக்குறையையும், அவர்களால் அறிந்து கொள்ள முடியும். அதற்கேற்றாற்போல் வாழவும் தெரியும். அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்களைப்போல் பூமியை இரண்டாய் பிளக்குமளவிற்கு பல்லாயிரம் அடிகளில் ஆழ்துளைக் கிணறு தோண்டி பூமியின் நீரைக் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சத் தெரியாது. உயிரினச் சுழற்சிப் பெருக்கம் என்றெல்லாம் படிக்காவிட்டாலும், கர்ப்பமாய் இருக்கும் விலங்குகளை ஒரு போதும் வேட்டையாட மாட்டார்கள். இயற்கை வளப் பாதுகாப்பு இயக்கம் நடத்திக் கொண்டிருப்பவர்களை விட, சாதாரண ஆதிவாசி ஒருவர் அனைத்து இன பறவைகளின் முட்டையிட்டு அடைகாக்கும் காலம், விதம், தன் குஞ்சுகளுக்கு உணவூட்டி பாதுகாத்து வளர்க்கு விதம் பற்றிய நிறைய தகவல்களை தன் அனுபவத்தின் மூலம் கற்று வைத்திருப்பார்.

விவசாயம் செய்யும் போது சூழல் பாதுகாப்பு (!!) மண்வளம் என்று நாம் இன்று புதிதாய் கண்டு பிடித்து சொல்லிக் கொண்டிருப்பவற்றை அவர்கள் செவ்வனே கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஆதிவாசிகள் காடுகளைப் பயன்படுத்துவது பொருளை உற்பத்தி செய்து, சந்தையில் விற்று, பொருளீட்டி, காங்ரீட் கட்டிடங்களில் ஏ.சி., இண்டாநெட் என வாழ்வதற்காக அல்ல, தங்கள் வாழ்வின்  அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும்தான். விலங்குகளும் உயிர்வாழ்வதற்கு மட்டும்தான் இயற்கையைப் பயன் படுத்துகின்றன. ஆனால் இயற்கையைப் புரிந்துகொண்ட அறிவின் மூலம், அதைப் பாதுகாக்கும் பொறுப்புடன் செயல்படும்போது மட்டுமே மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபடுகிறான். இயற்கையின் முன் எந்த உயிரினங்களுக்கும் இல்லாத, இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. அந்தப் பொறுப்பை உணர்ந்து வாழும் ஆதிவாசிகளே உண்மையில் மனிதர்கள். அவர்கள்தான் வரலாற்று ரீதியாக இயற்கை வளங்களின் பாதுகாவலர்கள். அவர்களிடம்தான் இயற்கை வளங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து ஆதிவாசிகளிடம் அவர்களின் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த வரலாற்று உரிமையை மறுக்கும் அரசுக்கு எதிராக, ஆதிவாசிகள் நடத்தும் போராட்டங்களுக்குத் துணை நிற்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

(புதிய தடம் ஜுலை-செப்டம்பர் 2003 இதழில் இந்திரா என்ற பெயரில் வெளியான எனது கட்டுரை)