பல முக்கியமான அரசியல் தலைவர்களை உருவாக்கிய பெருமை வாய்ந்த, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்திற்குள் இரண்டு நாள் முன்பு, ஒரு மாணவன் சக மாணவியை கத்தியால் தாக்கி விட்டு தானும் விசம் தின்று இறந்து போனான். அந்த மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
வழக்கம் போல காதல் பிரச்சினைதான், அவனது தோழியான அந்த மாணவி அவனை மதிக்கவில்லையாம், எரிச்சலூட்டினாளாம்.வெறுமே தன்னைப் பயன்படுத்திக் கொண்டதாகவும், ஏமாற்றி விட்டதாகவும் அவன் உணர்ந்திருக்கிறான். அதற்காக துப்பாக்கி, கோடாரி, கத்தி, விசம் சகிதமாய் வந்து தன் தோழியை குத்திக் கொன்று விட்டு, தானும் செத்துப் போக முடிவு செய்து வந்துள்ளான்.
சென்ற தலைமுறை ஆணாதிக்க வாதிகளுக்கு பெண் தாய், தெய்வம் என்றால் இன்றை இளைஞர்களுக்கு தேவதை + தாய். பார்க்க நல்ல தேவதைபோல், சினிமாக் கதாநாயகிகள் போல் இருக்க வேண்டும். தன்னைச் சாராமல் சுயமாக சம்பாதிக்கத் தெரிந்த, அறிவாளியாக இருக்க வேண்டும். அதே நேரம், வழக்கம் போல் தான் என்ன செய்தாலும் பொறுத்து, மன்னித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவமுள்ள தாயாகவும் இருக்க வேண்டும்.
என்ன தவறு செய்தாலும், தாய் தன் குழந்தையை ஏற்றுக் கொள்வாள், ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் இந்த சமூகக் கட்டமைப்பில். அது அந்த வயது கொடுக்கும் முதிர்ச்சி.
ஆனால் காதலி, அவனைப் போலவே ஒரே வகுப்பில் படிக்க வந்தவள். இவனையொத்த சக வயதுள்ளவள். ஆனால், அவளிடத்தில் தாயை யொத்த பக்குவத்தை எதிர்பார்க்கின்றனர். தன்னைப் போன்ற சக மனுசிதான் தன் காதலியும், அவளுக்கான விருப்பு, வெறுப்புகள் இருக்கும். அவளிடமும் நிறை, குறைகள் இருக்கும். அவளும் தன்னைப் போலவும், தன் மற்ற ஆண் நண்பர்களைப் போலவும் சரியோ, தவறோ இழைக்க வாய்ப்பிருக்கிறது, என்றெல்லாம் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. இந்தக் காதலுறவில் ஆண்கள், தன் காதலியை மனைவியாக கருதி அடக்க நினைக்கிறார்கள்,.
ஆனால் இன்று வெளியில் படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வந்திருக்கும் இளம் பெண்கள், தங்கள் அம்மாவைப் போன்ற ஒரு அடிமை வாழ்க்கை வாழ்ந்து விடக் கூடாது என்பதற்காக, படிப்பையும், வேலையையும் தேர்ந்தெடுக்கிறவர்கள். அவர்கள் எச்சரிக்கையுடன்தான் இருப்பார்கள். அல்லது திருமணம், குடும்ப வாழ்க்கைக்குள் நுழையும் முன் தனக்கான முழு சுதந்திரத்தை அனுபவிக்க நினைப்பார்கள்.
இவர்களிடம் நம் புதிய தலைமுறை இளைஞர்கள் தங்களது ஆண் அதிகாரத்தை காட்டும் போது, அதற்கு எதிர்வினை புரியும் பெண்ணின் நடவடிக்கை இவர்களுக்கு ஈகோவாகத் தெரிகிறது.
அவள், ஆண்களைப் போலவே பல விசயங்களில் நடந்து கொள்வதற்கான சூழலை இன்றைய கல்வி முறையும் வேலைவாய்ப்புகளும் அவளுக்கு அளித்திருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாமல், அதற்கான அறிவில்லாமல் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாவதன் விளைவு இது.
நம் சமூகத்தில் பெண் ஒரு புது விசயத்தைச் சொன்னாலே அதை ஈகோவாகவும், திமிராகவும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள். தனிப்பட்ட காதலுறவில் இந்தச் சிந்தனை தன் வேலையைச் செய்கிறது.
அடிப்படையில், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்பது மாறி, கல்லானாலும் காதலனாகப் போகிறவன், புல்லானாலும புருசன் ஆகப் போகிறவன் என்று இருக்கச் சொல்கிறார்கள். இன்றைய தலைமுறைப் பெண்கள் அதற்கு தயாரில்லை. அதை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்புக்கு, இந்த ஆணுலகம் அவர்களைத் தண்டித்துக் கொண்டிருக்கிறது.
எந்தப் பெண்ணும், தன காதல் தோல்விக்காக காதலனை தாக்கியதில்லை. தன்னைத்தான் மாய்த்துக் கொள்வாள். அப்படி இறந்து போகிற பெண்களை இந்த சமூகம் ‘காதலுக்காக உயிரைவிட்ட பெண், அவளது காதல் உண்மையானது‘ என்றெல்லாம் பாராட்ட மாட்டார்கள். ‘,,,,,,எவன்கிட்டயோ ஏமாந்துட்டு வந்துட்டா,,,,,,‘ என்றுதான் சொல்வார்கள்.
காதல் தோல்வியை கடந்து வாழும் பெண்களை இவர்கள் அணுகும் விதத்திற்கு நயன்தாராதான் உதாரணம். அவர்கள் பொதுவாழ்வில், எந்தத் துறையில் சாதித்தாலும் நம் மக்கள் அதை மட்டும் மறக்காமல் மனதில் வைத்திருப்பார்கள்.
கடந்த இரண்டு மூன்று மாதங்களில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனவர்களில் 2,3 பெண்களும்தான் இறந்திருக்கிறார்கள். ஆனால் ஊடகங்கள் காதல் தோல்வியால் இறந்து போன, மன உளைச்சலுக்குள்ளான இளைஞர்கள் என்றுதான் கண்ணீர் வடிக்கிறது. (இளைஞர்கள் என்ற சொல்லை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாக, நாம் எப்பொழுதுமே பயன் படுத்துவதில்லை.)
நிலவும் காதல் பல்லவிகளெல்லாம் நிலவும் ஆணாதிக்க, சாதிய, வர்க்க பின் புலத்தில் உருவானவை. ஆண், பெண்ணை தன் சக தோழியாக, மனுசியாக மதித்து நடத்தும் சமூகம் வரும் வரை, இது போன்ற காதல் கூத்துக்கள், கொடுமைகள், கொலைகள், தற்கொலைகள் எல்லாம் தொடர்கதையாகத் தான் இருக்கும்.
சமூகத்தின் அனைத்து பிற்போக்கு விசயங்களையும் எதிர்க்கிறவர்கள், காதலுக்குள் ஊடுறுவியிருக்கும் பிற்போக்கு தன்மைகளை கேள்விக்குள்ளாக்காமல், சரிப்படுத்த முயற்சிக்காமல், சினிமாவில் காட்டப்படும் புல்லரிப்புக் காதல்களை அப்படியே சரி என்று ஏற்றுக் கொள்வதும், அதை வரவேற்பதும் இது போன்ற பல உயிரிழப்புகளைத்தான் ஏற்படுத்தும்.